Published : 05 Feb 2017 06:18 PM
Last Updated : 05 Feb 2017 06:18 PM
தமிழகத்தில் அரசுத் துறைகளில்உள்ள 3.9 லட்சம் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் தலைமைச்செயலகம் முதல் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பல்வேறு பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் நிலுவையில் உள்ளன.
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களாக 13 லட்சம் பேர் உள்ளனர். இவற்றில் சுமார் 3.9 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஏற்கெனவே தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக பேரூராட்சி, பஞ்சாயத்து பகுதிகளில் போதிய கடைநிலை ஊழியர்கள் இல்லை என்பதால் கிராமப்புறங்கள் வளர்ச்சி பெற முடியவில்லை. நாட்டின் முன்னேற்றத்துக்கு கிராமப்புற வளர்ச்சியின் அவசியத்தை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே, தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT