Published : 25 Jun 2017 12:24 PM
Last Updated : 25 Jun 2017 12:24 PM

சிவன் கோயிலில் மரகத லிங்கம் திருட்டு: நன்கொடையாளர்கள் போல் வந்து நோட்டமிட்ட கொள்ளையர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிவன் கோயிலில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கத்தை மர்ம நபர்கள் நேற்று திருடிச் சென்றனர்.

திருப்போரூர் அருகே உள்ள இள்ளலூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 400 ஆண்டுகள் பழமையான கற்பகாம்பாள் உடனுறை சுயம்பு ஈஸ்வரர் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகளும், மரகதத்தால் ஆன லிங்கம் ஒன்றும் இருந்தது. பூஜைகள் முடிந்து வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பூட்டிவிட்டு மறுநாள் காலையில் கோயிலைத் திறக்க வந்தபோது கோயில் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மரகத லிங்கத்தின் மேல் பகுதியைப் பெயர்த்து மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைரேகை பதியாமல் இருப்பதற்காக கோயில் தாழ்ப்பாளில் எண்ணையை ஊற்றிவிட்டுச் சென்றுள்ளனர். அங்கிருந்த ஐம்பொன் சிலைகளை அவர்கள் எடுத்துச் செல்லவில்லை.

இந்த திருட்டுச் சம்பவம் குறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோயிலில் பதிந்திருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர். இது தொடர்பாக திருப்போரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நன்கொடையாளர்கள் போல் வந்து நோட்டமிட்ட திருடர்கள்

சில நாட்களுக்கு முன்பு இள்ளலூர் கிராமத்துக்கு நன்கொடையாளர்கள் போல் வந்த இருவர், இக் கோயில் விவரங்களைக் கேட்டுள்ளனர். கோயிலின் சிறப்பையும் இங்குள்ள லிங்கம் மரகதத்தால் ஆனது என்ற தகவலையும் பொதுமக்கள் அவர்களிடம் கூறியுள்ளனர். இந்தக் கோயிலுக்கு விரைவில் நன்கொடை தருவதாகக் கூறிவிட்டு இருவரும் சென்றுள்ளனர்.

இந் நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பு, இரவு நேரத்தில் சிலர் கோயில் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடியுள்ளனர். இதைக் கண்ட பொதுமக்கள் சத்தம் போடவே தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். அந்த வாகனம் திருப்போரூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் குழு அமைத்து, இரவு நேரங்களில் கோயிலுக்கு காவல் இருந்துள்ளனர். நேற்று மழை பெய்ததால் கோயில் காவலுக்கு யாரும் வரவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பறயன்படுத்தி மர்ம நபர்கள் மரகத லிங்கத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.

அசாதாரண சூழல் நிலவியபோதே இக் கோயில் விவகாரத்தில் போலீஸார் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த திருட்டைத் தடுத்திருக்கலாம் என்கின்றனர் இள்ளலூர் பொதுமக்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x