Published : 13 Mar 2014 08:35 AM
Last Updated : 13 Mar 2014 08:35 AM
அரசியலில் இருந்து விலகுமாறு கூறி தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பணிகளில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவிலும் புதன்கிழமை காலையிலும் இவருக்கு தொடர்ச்சியாக மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.
பொன்.ராதாகிருஷ்ணனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட ஒருவர், ‘‘நீங்கள் அரசியலில் இருந்து விலக வேண்டும். வேறு தொழில் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள். இந்த எச்சரிக்கையையும் மீறி தீவிர அரசியலில் ஈடுபட்டால் உங்களை கொலை செய்து விடுவோம். அரசியலில் இருந்து விலக உங்களை மீண்டும் எச்சரிக்கிறேன்’’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.
பின்னர், அதே நபர் மீண்டும் போன் செய்தபோது பொன்.ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் சிலர் பேசினர். அவர்களையும் அந்த நபர் திட்டியிருக்கிறார். செவ்வாய்க்கிழமை இரவில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை என 6 முறையும், புதன்கிழமை காலை 4 முறையும் தொடர்ந்து போனில் பேசி மிரட்டியுள்ளார். ஒரே எண்ணில் இருந்துதான் 10 முறையும் அழைப்பு வந்துள்ளது.
இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் புகார் கொடுத்
துள்ளார். போலீஸார் கூறும்போது, ‘‘பாரதிய ஜனதாவில் சேருங்கள் என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை அந்தக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் வாகனங்களில் ஒட்டியுள்ளனர். அந்த ஸ்டிக்கரில் பொன்.ராதாகிருஷ்ணனின் செல்போன் எண்ணும் உள்ளது. அந்த எண்ணைப் பார்த்து யாரோ ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT