Published : 14 Aug 2016 10:24 AM
Last Updated : 14 Aug 2016 10:24 AM

மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ள சின்னமலை - விமான நிலையம் இடையே பேருந்து நிறுத்தம், சாலை பணிகள் மெத்தனம்

மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ள சின்னமலை விமான நிலையம் இடையே சாலை விரிவாக்கம் மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணிகள் மெத்தனமாக நடக்கின்றன.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், இரண்டாவது வழித்தடத்தில் ஆலந்தூர் கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, சின்னமலை - விமான நிலையம், ஆலந்தூர் - பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இதில், சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரை ஆய்வு மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர், மெட்ரோ ரயில் சேவை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனால், சின்னமலை விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தொடக்க விழா தேதியை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. ஆகஸ்ட் இறுதிக்குள் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. ஆனால், இந்த சாலைகளில் இருக்கும் தடுப்புகள் சில இடங்களில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கின்றன. இதேபோல நங்கநல்லூர் ரோடு, மீனம்பாக்கம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகில் மாநகர பேருந்துகள் நின்று செல்லும் வகையில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சின்னமலை - மீனம்பாக்கம் இடையே சாலைகளில் பெரும்பாலான தடுப்புகள் அகற்றப்பட்டு விட்டன. ஒரு சில இடங்களில் இருக்கும் தடுப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் பேருந்து நிறுத்தம் கேட்டு மாநகர போக்குவரத்து கழகத்திடம் வலியுறுத்தி உள்ளோம். இதற்கான பணிகளை விரைவில் அவர்கள் தொடங்குவர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x