Published : 03 Jun 2016 08:16 AM
Last Updated : 03 Jun 2016 08:16 AM

20 மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள்: ஜூன் 15 முதல் தேங்காய் கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் ஜூன் 15-ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 4 லட்சத்து 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தென்னை பயிரிடப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்திலும், சாகுபடி பரப்பில் 3-ம் இடத்திலும் உள்ளது. தற்போது சந்தையில் கொப்பரைத் தேங்காய் விலை கிலோ ரூ.50-க்கும் குறைவாக உள்ளது. இதனால், கொப்பரைத் தேங்காயை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, ‘விலை குறையும் போதெல்லாம் விவசாயிகளிடம் இருந்து கொப்ப ரையை அரசே வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிமுக தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா வாக் குறுதி அளித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தற்போது கொப்பரைத் தேங்காய் விலை குறைந்துள்ளது.

எனவே, தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்றும் விதமாக கொப்பரைத் தேங்காய் கொள் முதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோ சகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித் துறை செயலர் க.சண்முகம், உணவுத்துறை செயலர் ஷிவ்தாஸ் மீனா, வேளாண்துறை செயலர் ச.விஜயகுமார், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

தென்னை விவசாயிகள் நலன் காக்கும் வகையில் கொப்பரைத் தேங்காயை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், வேலூர், மதுரை, நாகை, நாமக்கல், புதுக் கோட்டை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொப்பரைத் தேங்காய் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இப்பகுதிகளில் கூட்டுறவுத் துறையின் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடங் கப்பட்டு, கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படும். அரவை கொப்பரை ஒரு கிலோவுக்கு ரூ.59.50, பந்து கொப்பரை ரூ.62.40 என்ற ஆதார விலை அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப் படும்.

மதிப்பு கூட்டு வரி ரத்து

இந்த கொள்முதலுக்கு தேவை யான ரூ.10 கோடி நடைமுறை மூலதனத்துக்கு ஏற்பாடு செய்யப் படும். கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காய்க்கான தொகை விவசாயிகள் விருப்பத் துக்கு ஏற்ப அவர்கள் வங்கிக்கணக் கில் மின்னணு நிதி பரிமாற்றம் அல்லது கோடிட்ட காசோலை மூலம் உடனடியாக வழங்கப்படும்.

நேரடி கொள்முதல் நிலையங் களில் கொள்முதல் செய்யப்படும் கொப்பரைத் தேங்காய்க்கு விவசாயிகளால் செலுத்தப்பட வேண்டிய ஒரு சதவீத சந்தைக் கட்டணம் ரத்து செய்யப்படும். தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் கேட்டுக் கொண்டபடி, கொள்முதல் செய்யப் பட்ட கொப்பரைத் தேங்காயை விற்கும்போது மாநில அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் ரத்து செய்யப்படும். இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் ஜூன் 15-ம் தேதி முதல் செயல்படும். கொப்பரைத் தேங்காய்கள் அடுத்த 6 மாதங்களுக்கு கொள் முதல் செய்யப்படும். இந்த நடவடிக்கையால் தென்னை விவசாயிகள் பயன்பெறுவர்.

இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x