Published : 25 Jul 2016 10:17 AM
Last Updated : 25 Jul 2016 10:17 AM
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித் துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாயம் செழிக்க காவிரி அன்னைக்கு மலர் தூவி வணங்கும் ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 2-ம் தேதி வரும் ஆடிப்பெருக்கு விழாவை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் என காவிரி பகுதி மக்கள், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவற்றை கருத்தில்கொண்டு, காவிரி பகுதி மக்கள் ஆடிப் பெருக்கை கொண்டாடும் வகையில், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் விடுவிக் கப்படுகிறது. இத்துடன் கூடுதலாக 25-ம் தேதி இன்று முதல் 28-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்படும். அதன் பின், 29-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு விநாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT