Published : 10 Dec 2013 09:10 AM
Last Updated : 10 Dec 2013 09:10 AM

கூடங்குளம் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு

கூடங்குளத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள கூத்தன்குழி மீனவர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.8) இரவு 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதனால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் கூத்தன்குழி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், இருதரப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்காக ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை மிரட்டவும், தாக்குதல் நடத்தவும் இங்கு நாட்டு வெடிகுண்டுகள் சர்வசாதாரணமாக தயாரித்து பதுக்கப்பட்டுள்ளன.

கூடங்குளம் அணுஉலை அருகே, 2 கி.மீ. தொலைவில் உள்ள இடிந்தகரை சுனாமி காலனி பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி இரவு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.

கூத்தன்குழி கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்து, சுனாமி காலனியில் தங்கியிருந்தவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தபோது, அவை வெடித்ததாகப் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (டிச.8) இரவு கூத்தன்குழி கிராமத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதேபோல் சனிக்கிழமை இரவும் இங்கு ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்ததாகத் தெரிய வந்துள்ளது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து கூடங்குளம் போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவில்லை.

கூத்தன்குழி கிராமத்தில் இரவு நேரத்தில் சந்தேகப்படும் வகையில் நாட்டு வெடி

குண்டுகள் வெடிப்பு தொடர்பாக ஏற்கெனவே போலீசார் 5 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இக்கிராமத்துக்குள் பதுக்கியுள்ள நாட்டு வெடிகுண்டுகளை கைப் பற்றவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் போலீசார் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x