Published : 30 Mar 2014 11:54 AM
Last Updated : 30 Mar 2014 11:54 AM

தேர்தல் பறக்கும் படையாக நடித்து ரூ.30 லட்சம் சுருட்டிய 4 பேர் கைது: ‘கறக்கும்’ படை தலைவனுக்கு வலை

தேர்தல் பறக்கும் படை போல நடித்து ரூ.30 லட்சத்தை சுருட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் தலைவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை மண்ணடி செம்புதாஸ் தெருவில் நோபிள் டெக் என்ற நிறுவனத்தின் கிளை உள்ளது. இங்கு வசூலான ரூ.30 லட்சத்தை காசிம், கோவிந்தராஜ் என்ற இரு ஊழியர்கள் போயஸ் கார்டனில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு பைக்கில் எடுத்துச் சென்றனர். வழியில் போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் பைக்கை மறித்து சோதனை செய்தார். பணத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் அதிகாரிகளைப் பார்க்க வேண்டும் என்று கூறி அவர்களை கோட்டை அருகே அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மேலும் 3 பேர் இருந்தனர். ஊழியர்கள் இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டு அவர்கள் அனை வரும் பெசன்ட் நகர் நோக்கிச் சென்றுள்ளனர். கடற்கரை சாலையில் செல்லும்போது, ரூ.30 லட்சத்தை பறித்துக்கொண்டு காரில் இருந்து இருவரையும் வெளியே தள்ளிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பூக்கடை போலீஸில் காசிம், கோவிந்தராஜ் புகார் செய்தனர். தங்களைக் கடத்திய கார் பதிவெண்ணையும் கூறினர். போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கார் எண்ணை வைத்து, தேர்தல் பறக்கும் படை யாக நடித்த கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அந்த கும்பலை சேர்ந்த 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு பிடித்தனர். அவர்கள் தேனாம் பேட்டையை சேர்ந்த விக்கி (28), ராயப்பேட்டையை சேர்ந்த முரளி (30), மணிகண்டன் (29) மற்றும் கிஷோர் (28) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் ரூ.2 லட்சம் மட்டும் இருந்தது. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட ராயப்பேட்டை பெரோஸ்கான் தலைமறைவாக உள்ளார். அவரிடம்தான் மீதி பணம் முழுவதும் இருப்பதாக பிடிபட்டவர்கள் கூறுகின்றனர். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x