

வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் ரூ.55 கோடி மோசடி செய்ததாக கூறி எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா மற்றும் எண்ணூர் துறைமுக அதிகாரிகள் மீது சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை எண்ணூர் காம ராஜர் துறைமுகத்தில் செட்டிநாடு சர்வதேச நிலக்கரி நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா. இவர் செட்டிநாடு குழுமங்களின் தலைவர் மறைந்த எம்.ஏ.எம்.ராமசாமியின் வளர்ப்பு மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
செட்டிநாடு சர்வதேச நிலக்கரி நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் இருந்து சென்னை எண்ணூர் துறை முகம் வழியாக நிலக்கரி இறக்கு மதி செய்யப்படுகிறது. இதற்காக இந்நிறுவனம் எண்ணூர் துறைமுகத் துக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தில் 2010-ம் ஆண்டு செப்டம்பர் 10 முதல் 2014-ம் ஆண்டு பிப்ரவரி வரை ரூ.47.65 கோடியை செலுத் தாமல் நிலுவையில் வைத்திருந் ததை துறைமுக அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த பிரச்சினை குறித்து துறை முக தீர்ப்பாயத்தில் 2012 நவம்பர் 14 முதல் 2014 ஏப்ரல் 5-ம் தேதி வரை 19 முறை கூடி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் ரூ.47.65 கோடியும் அதற்கான வட்டித் தொகையாக ரூ.8.04 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.55.69 கோடி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்தத் தொகையை செலுத்தச் சொல்லி செட்டிநாடு சர்வதேச நிலக்கரி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப் பினர். ஆனால், கட்டணத்தை அந்நிறுவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து எண்ணூர் துறை முக அதிகாரிகள் நடத்திய விசா ரணையில், பணத்தை செலுத்தாமல் இருக்க துறைமுகத்தில் பணியாற் றும் சில அதிகாரிகள் செட்டிநாடு நிலக்கரி நிறுவனத்துக்கு உதவுவது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து எண்ணூர் துறைமுக அதிகாரிகள் சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் செய்தனர். புகாரின்பேரில் சிபிஐ போலீஸார் நடத்திய விசாரணை யில், எண்ணூர் துறைமுகத்தின் கார்ப்பரேட் பிரிவு பொதுமேலாளர் சஞ்சய்குமார், நிதிப்பிரிவு பொது மேலாளர் எம்.குணசேகரன் ஆகியோர் செட்டிநாடு நிலக்கரி நிறுவனத்துக்கு உதவி செய்திருப்பது தெரிந்தது.
அதைத் தொடர்ந்து துறைமுக அதிகாரிகள் சஞ்சய்குமார், எம்.குணசேகரன், எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா ஆகியோர் மீது சிபிஐ போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
‘செட்டிநாடு சர்வதேச நிலக்கரி நிறுவனத்தின் பங்குதாரராக மட் டுமே எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா இருக்கிறார். காரணம் இல்லாமல் அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று செட்டிநாடு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.