Published : 06 Jul 2016 11:08 AM
Last Updated : 06 Jul 2016 11:08 AM
பட்டினப்பாக்கத்தில் 4 கொலை மற்றும் ஒரு பாலியல் பலாத்காரம் சம்பவத்துக்கு காரணமாக இருந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பட்டினப்பாக்கம் சீனிவாச புரத்தைச் சேர்ந்த ஆசிரியை நந்தினியிடம் பணத்தை வழிப்பறி செய்வதற்காக ஒருவர் இரு சக்கர வாகனத்தில் துரத்தியதில், நந்தினி கீழே விழுந்து மரணமடைந்தார். பிடிபட்ட குற்றவாளி கருணாகரன் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையால், அப்பகுதி யில் பல்வேறு குற்றச் சம்ப வங்கள் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பட்டினப்பாக்கம் கடல் அறக்கட்டளை தலைவர் ஆக்னஸ் கூறும்போது, "பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை மையமாக வைத்து பல குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. அந்த டாஸ்மாக் கடையில் குடிக்கச் சென்றபோது பாட்டிலில் மதுவின் அளவு குறைவாக உள்ளது என்று எழுந்த வாக்குவாதத்தால் கடந்தாண்டு ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் சில்லறை குறைந்தது என்று கூறி சண்டை யிட்டதால் கொலை செய்யப் பட்டார். இதேபோல், அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதால் 2 பேர் மரணமடைந் தனர். பஸ் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். இந்த குற்றச்செயல்கள் அனைத்துக்கும் காரணமான இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று நாங்கள் பல முறை போராட்டம் நடத்தியும். இதை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை
சீனிவாசபுரத்தை சேர்ந்த எம்.ரேவதி என்பவர் கூறும்போது, "பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையால் நிம்மதியே இல்லாமல் உள்ளோம். 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வர முடியாத அளவுக்கு குடிகாரர்கள் தொல்லை செய் கின்றனர். வேண்டுமென்றே இடிக்க வருவது, எச்சில் துப்புவது , பெண் களை கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்" என்றார்.
டாஸ்மாக் கடை பல்வேறு குற்றச் சம்பவங்களுக்குக் காரணமாக இருப்பதாகக் கூறி அதற்கு பெண்கள் நேற்று காலை பூட்டுப் போட்டனர். இதையடுத்து 20-க்கும் அதிகமான போலீஸார் அந்தக் கடைக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
வழிப்பறி கொள்ளையனால் ஆசிரியை நந்தினி மரணமடைந்ததை அடுத்து, பட்டினப் பாக்கம் டாஸ்மாக் கடை முன் பட்டினப்பாக்கம் மகளிர் அமைப்பினர் நேற்று காலையில் மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அந்த கடைக்கு பூட்டுப்போட்டனர். இதனால் நேற்று முழுவதும் அந்தக் கடை திறக்கப்படவில்லை.
ஆத்திரத்தால் பொதுமக்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் 10-க்கும் அதிகமான இரும்பு தடுப்புகளை அமைத்து, 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்களுக்கும், பொதுமக்க ளுக்கும் பாதுகாப்பு அளிக்காத காவல்துறை, டாஸ்மாக் மதுக்கடைக்கு மட்டும் பாதுகாப்பு கொடுப்பது ஏனென்று அப்பகுதி பெண்கள் சிலர் காவல் அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 30 பேரின் கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடையை மூடுவதற்கு அதிகாரிகள் சம்மதித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்தக் கடை இயங்குவதால் விபரீதங்கள் தொடருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடல் அறக் கட்டளையைச் சேர்ந்த பி.கவிதா என்பவர் கூறும்போது, "பட்டினப் பாக்கம் டாஸ்மாக் கடையில் மது அருந்தியதால், சீனிவாசபுரம் பகுதியில் 30 பேருக்கு கல்லீரல் பாதிக் கப்பட்டுள்ளது. 24 முதல் 40 வயதுள்ள ஆண்களில் பாதி பேருக்கு கண்களில் குறைபாடு உள்ளது. பலருக்கு சிறுநீரகம் செயலிழந்துள் ளது. இதனால், எங்கள் பகுதியில் பெண்கள்தான் குடும்பத்தை காப் பாற்ற பணிக்கு செல்கின்றனர். எனது கணவருக்கு சிறுநீரகங்கள் செய லிழக்கவே, எனது ஒரு சிறுநீரகத்தை அவருக்கு அளித்து காப்பாற்றினேன்.
இந்தக் கடையை மூட வேண்டும் என்று எங்கள் அமைப்பின் தலைவர் ஆக்னஸ் தலைமையில் 2008 முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். 2015 மார்ச் மாதம் நாங்கள் போராட்டம் நடத்திய போது, கடையை வேறு இடத்துக்கு மாற்றுகிறோம் என்று மாவட்ட மேலாளர் கைப்பட எழுதி கொடுத்தார். ஆனால், இன்றைய தேதி வரை அந்தக் கடையை மூடவில்லை.
பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடை யிலிருந்து தினமும் குறைந்தது ரூ.5 லட்சம் வருவாய் கிடைப்பதுதான் இதற்கு காரணம். மேலும், அந்தக் கடையில் உள்ள மது வகைகளை முல்லை நகரில் வீடு ஒன்றின் மூலம் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2 மடங்கு அதிக விலை வைத்து விற்பனை செய்கின்றனர்" என்றார்.
இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரி களிடம் கேட்டபோது, "சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்காக இடம் தேடி வருகிறோம். ஆனால், வேறு இடம் கிடைக்கவில்லை. குடித்துவிட்டு யாரும் அசம்பாவிதங்களில் ஈடுபடக் கூடாது என்பதற்காக காவல்துறை பாதுகாப்போடு கடை இயங்கியது" என்றனர்.
ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையால் இதுமாதிரியான சம்ப வங்கள் தொடர்ந்து நடக்கின் றன.
தமிழகத்தில் 500 மதுக் கடைகளை மூடிய தமிழக அரசு உண்மையிலேயே பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் இது போன்ற ஆயிரக்கணக்கான கடைகளை மூடாமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இந்தக்கடையை மூடியிருந்தால் 2 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். எனவே, பட்டினபாக்கம் மதுக் கடையை உடனே மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT