Published : 06 Nov 2013 01:41 PM
Last Updated : 06 Nov 2013 01:41 PM

இலங்கைக்கு பாடம் புகட்ட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்து வரும் இலங்கை அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் அந்நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்:

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்படையினர் 13 மீனவர்களை கைது செய்துள்ளனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்கள் கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்த போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட இரு நிகழ்வுகளுமே இந்திய கடல் எல்லைக்குள் தான் நடைபெற்றுள்ளன. மீனவர்களை கைது செய்த சிங்களப்படையினர் அவர்களுக்குச் சொந்தமான 7 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களைத் தாக்குதல், கைது செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் இந்தியாவின் இறையாண்மைக்கு இலங்கை அரசு சவால் விடுத்து வருகிறது. இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி கோரும் போதெல்லாம் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது அதன் இறையாண்மையை பாதிக்கும் செயல் என்று மத்திய அரசு கூறிவந்தது.

இப்போது தமிழக மீனவர்களை கைது செய்வதன் மூலம் இந்திய இறையாண்மை மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது தான் தமிழக மீனவர்களின் சாபக்கேடு.

இப்போது கைது செய்யப்பட்ட 30 மீனவர்களையும், ஏற்கனவே இலங்கை சிறையில் வாடும் 75 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும்படி இலங்கையிடம் இந்தியா கடுமையாக எச்சரிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இலங்கை அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் அந்நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தியாவின் இறையாண்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x