Published : 09 Mar 2017 07:28 PM
Last Updated : 09 Mar 2017 07:28 PM

கச்சத்தீவு திருவிழாவை வேறொரு நாளில் நடத்த கோரிக்கை

கச்சத்தீவில் சனிக்கிழமை துவங்க உள்ள புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழாவை வேறொரு நாளில் நடத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கச்சத்தீவு, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேசுவரத்திலிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந்தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடையலாம்.

கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோனிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியை சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கடந்த 1913ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோனியார் தேவாலயம் நிறுவப்பட்டது.

கச்சத்தீவு ஒப்பந்தம்

ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சத்தீவை மண்டபம் மரைக்காயர்கள் குத்தகைக்கு எடுத்து முத்துக்கள் மற்றும் மீன்பிடிக்காக பயன்படுத்தி வந்தனர். 08.07.1974 அன்று இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவுக்கு தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவை எழுதிக் கொடுத்தார். இந்த கச்சத்தீவு ஒப்பந்தப்படி அங்குள்ள புனிதஅந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை அரசு சார்பாக கச்சத்தீவில் புதிய தேவாலயம் 23.12.2016 அன்று திறக்கப்பட்டது.

இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா மார்ச் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் முதன்மை குரு ஜோசப்தாஸ் ஜெயரத்தினம்,சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கத்திற்கு அனுப்பிய அழைப்பினை ஏற்று கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை ராமேசுவரம் பங்குத்தந்தை சகாயராஜ் செய்து வந்தார்.

இலங்கை கடற்படையின் துப்பாக்சிச் சூட்டில் தமிழக மீனவர் பிரிட்ஜோ (21) உயிரிழந்ததை தொடர்ந்து தமிழகத்திலிருந்து கச்சத்தீவில் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழக மீனவர்களால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வேறொரு நாளில் திருவிழாவை நடத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து ராமேசுவரம் பங்குத்தந்தை சகாயராஜ் வியாழக்கிழமை கூறியதாவது,

''பிரிட்ஜோவின் படுகொலையை தொடர்ந்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருவதால் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்திருந்தோம். கச்சத்தீவு திருவிழாவை அரசியல் ஆக்க வேண்டாம் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என நெடுந்தீவு பங்குத் தந்தையும் இலங்கையில் உள்ள தமிழ் சொந்தங்களும் அழைத்த வண்ணம் உள்ளனர்.

கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா இந்திய-இலங்கை இரு நாட்டின் மக்களின் உறவு தொடர்பான விழா என்பதால் வேறொரு நாளைக்கு கச்சத்தீவு திருவிழா மாற்றி ஏற்பாடுகள் செய்து தரவேண்டும் இந்திய இலங்கை அரசினை கேட்டுக் கொள்கிறோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x