Published : 26 Jan 2014 09:33 AM
Last Updated : 26 Jan 2014 09:33 AM

சென்னைக்கு வெடிகுண்டு மிரட்டல்: அண்ணா மேம்பாலத்தில் தீவிர சோதனை; கூரியர் கம்பெனி ஊழியர் சிக்கினார்

அண்ணா மேம்பாலம் உள்பட 6 இடங்களில் குண்டு வெடிக்கும் என போனில் மிரட்டல் விடுத்ததால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது. மிரட்டல் விடுத்த கூரியர் கம்பெனி ஊழியர் சிக்கினார்.

சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘‘சென்னையில் அண்ணா மேம்பாலம் உள்பட 6 முக்கிய மான இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. முதல்கட் டமாக அண்ணா மேம்பாலத்தில் குண்டு வெடிக்கும். இந்த குடியரசு தின விழாவைக் கொண்டாட விடமாட்டோம்’’ என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

இதையடுத்து, எழும்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அண்ணா மேம்பாலத்துக்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் தேடியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. குண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை நடத்தி யதால் அண்ணா சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம், மெரினா காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடக்கவுள்ள மேடை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி நங்கநல்லூரைச் சேர்ந்த பிரபு என்ற வாலிபரை கைது செய்தனர். அவர் தனியார் கூரியர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பிடிபட்ட பிரபுவிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் டெல்லி, சென்னை, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாது கோவை, சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங் களிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x