தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட உத்தரவிட வேண்டும்: ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட உத்தரவிட வேண்டும்: ஆளுநருக்கு ஸ்டாலின் கடிதம்
Updated on
2 min read

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு முதல்வர் மற்றும் பேரவைத் தலைவருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ''15-வது தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் அரசியலமைப்பு சட்டத்தின் சட்டப்பிரிவுகளுக்கு எதிராகவும், தமிழக சட்டப்பேரவை விதிமுறைகளை மீறியும் ஜனநாயகமற்ற முறையில் தமிழக அரசால் இறுதி செய்து வைக்கப்பட்டுள்ளதை தங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

2017-2018 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 16-03-2017 அன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் 24-03-2017 அன்று நிறைவடைந்தது. இதில், தமிழக சட்டப்பேரவை விதி 183(1) படி, வருடாந்திர நிதிநிலை அறிக்கையானது இரு பகுதிகளாக அமைந்துள்ளன.

1. பொது விவாதம், 2. மானியங்களுக்கான வாக்கெடுப்பு. 185(3) விதி மானியங்கள் மீதான வாக்கெடுப்பு அவையில் நடைபெறுவதை உறுதி செய்திருக்கிறது. மானியங்கள் மீதான வாக்கெடுப்புக்கான முக்கிய காரணம் அரசியல் சட்டப் பிரிவு 204 –ன் படி நிதி ஒதுக்க சட்ட முன்வடிவிற்கு ஒப்புதல் பெறுவதற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை நிறைவேற்றும் பொருட்டு, தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆலோசனைக் குழுவானது பொது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தை முதலில் 5 நாட்களுக்கு நடத்துவது எனவும், பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுற்ற பிறகு மானியக் கோரிக்கைகளுக்கான ஒப்புதலைப் பெற சட்டப்பேரவை கூட்டத்தொடரை மீண்டும் கூட்டுவதென முடிவு செய்தது.

இந்த முடிவானது சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்டு, சட்டப்பேரவையும் அதனை ஏற்றுக்கொண்டது. அதற்கேற்ப, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நிறைவு பெற்று சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இதுவரை இல்லாத வகையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் வருமான வரித்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, 10.04.2017 அன்று நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்ததோடு, தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வந்தது.

ஆனாலும் சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழக சட்டப்பேரவை தலைவர் சட்டமன்றத்தை மீண்டும் கூட்டவில்லை. மேலும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த சட்டப்பேரவையை மீண்டும் கூட்ட வேண்டும் என்று 19-04-2017 அன்று நான் பேரவைத் தலைவரிடம் மனு அளித்தேன்.

அதுமட்டுமின்றி, இதே கோரிக்கையை வலியுறுத்தி முதல்வரிடமும் மனு அளித்துள்ளேன். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு, வறட்சி, விவசாயிகள் தற்கொலை, குடிநீர் பஞ்சம், நீட் தேர்வு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் போன்ற பல முக்கிய பிரச்சினைகள் நிலுவையில் உள்ள நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டப்படவில்லை.

ஆனால் மாநில அரசோ சட்டப்பேரவை கூட்டத்தொடரை கூட்டுவதற்கு பதிலாக ஆளுநருக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடரை இறுதி செய்ய பரிந்துரை செய்து அதன்படி 11.5.2017 தேதியிட்ட S.O. Ms No.70 ஆணை வெளியிடப்பட்டிருப்பது தமிழக சட்டப்பேரவை விதிகளை மீறும் வகையில் அமைந்துள்ளது. மேலும், அரசின் இந்த முடிவானது அலுவல் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின்படி பேரவை எடுத்த முடிவிற்கு எதிரானதகாவும், தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் புனிதத்தன்மையை கெடுக்கும் விதத்திலும் உள்ளது.

அலுவல் ஆலோசனைக் குழுவின் முடிவினை பேரவையில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு அது பேரவையின் உத்தரவாக மாறும் என்று தமிழக சட்டப்பேரவை விதி 235 தெளிவாக கூறுவதை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விதி 237-ன் படி மேற்கூறிய உத்தரவில் சட்டப்பேரவையின் அவை முன்னவர் முன்வைக்கும் மாற்றத்தை சட்டப்பேரவை ஏற்றுக்கொண்டால் தவிர எவ்வித மாற்றமும் செய்ய இயலாது என்று தெரிவிக்கிறது. எனவே, அலுவல் ஆலோசனைக் குழுவினால் முடிவெடுக்கப்பட்டு பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவினை மாநில அமைச்சரவை உட்பட எந்தவொரு அதிகார மையத்தாலும் மீறவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது.

தற்போது சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு துறைகள் முன்வைத்த மானிய கோரிக்கைகளுக்கு பேரவையின் ஒப்புதல் பெறாமல் உள்ளது. அரசாங்கத்தால் பல்வேறு திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நிதிநிலை அறிக்கையானது முழுமை பெறாமல் உள்ளது. இவற்றை ஆளும் கட்சி உணரவில்லையா அல்லது ஆளும் கட்சி தமிழக சட்டப்பேரவையின் மாண்பை சிறுமைப்படுத்துகிறதா என்பதை எங்களால் புரிந்துக்கொள்ள இயலவில்லை.

எனவே, துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி ஒப்புதல் அளிக்கவும், மானியங்கள் மற்றும் ஒதுக்கீடு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் படைத்த சட்டப்பேரவையின் ஒப்புதல் இல்லாமல் அரசின் பணம் பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்படும் விநோதமான சூழ்நிலையை தவிர்க்கவும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை உடனடியாக கூட்டுமாறு முதல்வர் மற்றும் பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டுமென்று ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in