Published : 23 Jan 2017 12:43 PM
Last Updated : 23 Jan 2017 12:43 PM
மெரினா போராட்டத்தை தள்ளிவைப்பதாக இளைஞர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் திங்கட்கிழமை போராட்டப் பகுதிகளில் நிலவி வந்த கொந்தளிப்பு நிலை தணிந்துள்ளது. அதன் முழு விவரம் > >ஜல்லிக்கட்டு போராட்டம் தள்ளிவைப்பு: மெரினா போராட்டக்காரர்கள் 2 மாதம் காத்திருக்க முடிவு
முந்தையப் பதிவுகள்:
மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்தனர்.
இந்நிலையில், மெரினாவில் இருந்து செல்ல மறுத்த போராட்டக்காரர்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். | அதன் விவரம் > >மெரினாவில் இருந்து செல்ல மறுக்கும் போராட்டக்காரர்களின் நான்கு கோரிக்கைகள்
அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அப்பகுதியின் ஊர் கமிட்டி தெரிவித்துள்ளது.| அதன் முழு விவரம் > >அலங்காநல்லூரில் பிப்.1-ம் தேதி ஜல்லிக்கட்டு: ஊர் கமிட்டி
பிற்பகல் 2.45 மணி: நாமக்கல், ராசிபுரத்தில் போராட்டம் வாபஸ்
* நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
* ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த தொடர் போராட்டம் இன்று திரும்ப பெறப்பட்டது - மாணவர்கள் கலைந்து சென்றனர். >
பிற்பகல் 2.30 மணி: சென்னையில் போக்குவரத்து நெரிசல்
இளைஞர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் ரோடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர், வேளச்சேரி, கிண்டி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பிற்பகல் 1.45 மணி: பிப்ரவரி 2-ம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு
பாலமேட்டில் பிப்ரவரி 2-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அப்பகுதியின் ஊர் கமிட்டி தெரிவித்துள்ளது. அத விவரம் > >பிப்ரவரி 2-ம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு: ஊர் கமிட்டி
பிற்பகல் 1.35 மணி: மெரினாவில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இளைஞர்களுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். >
முன்னதாக, லாரன்ஸ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் > >மீண்டும் போராட்டக் களத்தில் இறங்க வேண்டாம்: லாரன்ஸ் வேண்டுகோள்
பிற்பகல் 1.30 மணி: ஈரோட்டில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
* ஈரோடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை மறித்து பொதுமக்கள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பன்னாட்டு குளிர் பானங்களை கீழே போட்டு உடைத்தனர்.
* சிவகங்கையில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் வைத்திருந்த பேனர்கள், கூடாரங்கள் போலீஸாரல் அகற்றப்பட்டன.
* காரைக்குடி மணிமண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
பிற்பகல் 1.15 மணி: தேனியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் 4 பேர் காயம்
* தேனி நேரு சிலையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் 4 பேர் காயம் ஏற்பட்டது.
* திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிற்பகல் 1 மணி: சிவகங்கை, கரூர் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
* சிவகங்கையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மன்னர் துரைசிங்கம் கலைக் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
* ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டி, கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளில் 150க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர், பழனி, கோவையில் போராட்டம் வாபஸ்
* திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பாக 6 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* பழனியில் போராட்டத்தை வாபஸ் பெற்ற போராட்டக்காரர்கள் தாங்களாகவே கலைந்து சென்றனர்.
* கோவையில் வ.உ..சி மைதானத்திலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறினர்.
பிற்பகல் 12.30 மணி: காசி கோவில் குப்பம் மீனவர்கள் போராட்டம்
சென்னை மெரினாவில் கடலில் இறங்கி போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக திருவொற்றியூர் காசி கோவில் குப்பம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கொட்டிவாக்கத்தில் போக்குவரத்து பாதிப்பு
கொட்டி வாக்கத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
வந்தவாசி, ஓசுரில் போராட்டம் வாபஸ்
* வந்தவாசியில் ஆறு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.
* ஓசூரில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
பெரம்பலூரில் 11 பேர் கைது
பெரம்பலூரில் போலீஸாரின் பேச்சு வார்த்தை ஏற்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் 11 பேர் கைது.
பிற்பகல் 12 மணி:வேளச்சேரியில் சாலை மறியல்
மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து வேளச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலை 11.30 மணி:அலங்காநல்லூரில் போராட்டக்காரர்கள் வெளியேற்றம்: தடியடி நடத்தி போலீஸார் கலைக்க முயற்சி
அலங்காநல்லூரில் போராட்டக்காரர்களை 10 நிமிடத்தில் கலைந்து செல்ல காவல்துறையினர் அவகாசம் அளிப்பதாக அறிவித்தனர். அதற்குப் பிறகு கலைந்து செல்லாத இளைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி வெளியேற்றினர். இதனால் போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
தடியடி, கல்வீச்சில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலை 11.20 மணி:சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்துக்கு தீ வைப்பு
சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்துக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் காவல் நிலையத்துக்கு அருகே இருந்த இருசக்கர வாகனங்கள், தடுப்பு வேலிகள் தீயில் கருகின.
காலை 9 மணி: திருவல்லிக்கேணியில் போலீஸ் குவிப்பு: இளைஞர்கள் மறியல்
மெரினா கடற்கரையிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் திரண்டு பேரணியாகச் சென்றனர்.அப்போது திருவல்லிக்கேணியில் போலீஸாருக்கும் இளைஞர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையிலும் இளைஞர்கள் கலைந்து செல்லாமல் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். அதன் விவரம் > >ஜல்லிக்கட்டு போராட்டம்: போலீஸ் நடவடிக்கை; தமிழக நிலவரம்
மெரினாவில் - காலை 8 மணி வரை:
> கடற்கரைக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் சென்னை காவல்துறையால் முடக்கம்
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். கடற்கரைக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
காலையில் மெரினாவில் நூற்றுக்கணக்கான போலீஸார் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். மாணவர்கள், இளைஞர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தத் தொடங்கினர். முதலில், பெண்கள், குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சிலர் தாங்களாகவே வெளியேறினர். ஆனால், போராட்டக்காரர்கள் பலரும் கடலை நோக்கி ஓடினர். அங்கேயே மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மெரினா கடற்கரை போராட்டக்களம் சில மணித்துளிகளில் போர்க்களமானது.
தற்கொலை மிரட்டல்
மாணவர்கள் சிலர் கடலில் இறங்கி போராடி வருகின்றனர். காவல்துறையினர் நெருங்கினால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டி வருகின்றனர்.
படகுகள் மூலம் உணவு, தண்ணீர்
சென்னை மெரினாவில் கடலுக்கு அருகே மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு படகுகள் மூலம் உணவு, குடி தண்ணீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், காவல்துறையினர் தங்களை நெருங்கவிடாமல் போராட்டக்காரர்கள் மணலை வாரி வீசுவதாகக் கூறப்படுகிறது.
பறக்கும் ரயில் சேவை ரத்து
மெரினாவில் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் கூட்டம்கூடுவதை தடுக்கும் வகையில் சென்னை வேளச்சேரி - கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் வழங்கினார். இதனால், ஜல்லிக்கட்டு மீதான தடை உடனடியாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுரை புறப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் எனக் கூறிச் சென்றார். ஆனால், மதுரை அலங்காநல்லூர், சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டம் வாபஸ் பெறவில்லை. ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கொண்டுவரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
போராட்டத்தைக் கைவிட வேண்டுகோள்
மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.
இளைஞர்கள் போராட்டத்தை மார்ச் 31 வரை தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்தார். அதற்குப் பிறகும் இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT