52 மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை: இலங்கை நீதிமன்றம் - தமிழக அரசு நடவடிக்கை

52 மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை: இலங்கை நீதிமன்றம் - தமிழக அரசு நடவடிக்கை

Published on

கடந்த நவம்பர் 20-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 20 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். 5 விசைப்படகுகளும் பறிமுதல் செய்தனர். அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மீனவர்கள் 20 பேரின் காவல் திங்கள்கிழமை முடிவடைந்தது. இதையடுத்து மீண்டும் மல்லாகம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களை நீதிபதி கஜநிதிபாலன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதேபோல் கடந்த அக். 15ம் தேதி காரைக்காலைச் சேர்ந்த 32 மீனவர்களையும் 4 படகுகளையும் சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர், திரிகோணமலை சிறையில் அடைத்தனர். இவர்களது காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் திங்கள்கிழமை திரிகோணமலை நீதிமன்ற நீதிபதி திருசெந்தில்நாதன் அனைவரையும் அவர்களது படகுகளையும் விடுவித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியின் பலனாக யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 20 பேரை மல்லாகம் நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்தது. இதேபோல் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை திரிகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 52 பேரை விடுவிக்க தலைமை பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டுள்ளது. மேலும் இலங்கை சிறையில் இருந்து தமிழக, காரைக்கால் மீனவர்கள் விடுவிப்பதற்கு ஏற்ப தமிழக அரசும் புழல் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in