Published : 21 Jul 2016 08:25 AM
Last Updated : 21 Jul 2016 08:25 AM
தமிழகத்தில் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தங்களது போராட்டத்தை நாளைக்குள்( ஜூலை 22) வாபஸ் பெறாவிட்டால் கூண்டோடு இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என இந்திய பார் கவுன்சில் தலைவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கத்தினர் தொடர் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கறிஞர் சங்கங்களின் இந்த தொடர் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தைக் கைவிடுமாறு பலமுறை அறிவுறுத்தியும் இன்னும் பல சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இது சட்டத்துக்கு புறம்பானது. இதனால் வழக்கு தொடுத்துள்ள பொதுமக்களும், அமைதியை விரும்பும் வழக்கறிஞர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர, பார் கவுன்சில் மீதுள்ள நம்பிக்கையும் இதன்மூலம் வீணடிக்கப்பட்டு வருகிறது.
22-ம் தேதிக்குள்
எனவே வரும் 22-ம் தேதிக்குள் (நாளை) வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறவில்லை எனில், இந்திய பார் கவுன்சில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும். அந்த சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூண்டோடு இடைநீக்கம் செய்யப்படுவதோடு, எதிர்காலத்தில் எந்த பார் கவுன்சில் தேர்தலிலும் பங்கேற்க முடியாத அளவுக்கு தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
உத்தரவு நகல்
இது தொடர்பாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் இன்று (21-ம் தேதி) பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி, அதன் மூலம் இந்த உத்தரவு குறித்து அனைத்து வழக்கறிஞர் சங்கத்தினருக்கும் தெரிவிக்க வேண்டும். மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியலையும் உடனடியாக இந்திய பார் கவுன்சிலுக்கு, தமிழ்நாடு பார் கவுன்சில் அனுப்ப வேண்டும். இந்த உத்தரவு நகலை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT