Published : 28 Jan 2014 12:53 PM
Last Updated : 28 Jan 2014 12:53 PM
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலான ஆசிரியர் நியமன முறையை 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு ரத்து செய்தது.
அதற்கு மாற்றாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு அடிப்படையிலும் நியமிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.
தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு மறுப்பு, போட்டித்தேர்வில் வினாத்தாள் குளறுபடிகள், ஆசிரியர்கள் நியமனத்தின்போது பொதுப்பிரிவில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுப்பு என பல்வேறு குளறுபடிகள் அரங்கேறின.
தமிழக அரசு, இனியாவது தனது தவறான அணுகுமுறையை மாற்றிக்கொண்டு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை உறுதியாக கடைபிடிக்க வேண்டும்.
மத்தியச் சமூக நீதி அமைச்சகத்தின் வழிகாட்டு தலின்படி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகளை நடைமுறைப்படுத்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்.
ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளுக்கும் இதே முறையை பின்பற்றி, குறைக்கப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு, கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT