Last Updated : 14 Oct, 2014 12:36 PM

 

Published : 14 Oct 2014 12:36 PM
Last Updated : 14 Oct 2014 12:36 PM

கொடுப்பது உணவல்ல, உயிர்

உலக உணவு நாள்: அக்டோபர் 16

தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடினார் பாரதியார். உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இத்தனை ஆவேசத்துடன் அவர் கவிதை புனைந்துள்ளார்.

பசிப்பிணியைத் துரத்த வேண்டும் என்பது உலக நாடுகளின், மனிதர்களின் கனவு, ஆசை, விருப்பம். அடிப்படையான மனிதநேயத்தை ஆதாரமாகக் கொண்டே இந்த எண்ணம் வலுப்பெறுகிறது. ஒரு மனிதர்கூடப் பசியால் வாடக் கூடாது என்பதே அதன் அடிநாதம். அதை நோக்கி உலகம் நகர்ந்துகொண்டே இருக்கிறது.

இந்த நகர்வின் முக்கியத் திருப்பமாக, 1945-ம் ஆண்டு அக்டோபர் 16 அன்று கனடாவில் உள்ள கியூபெக் நகரில் உலக உணவு மற்றும் விவசாயக் கழகம் (FAO) நிறுவப்பட்டது. ஊட்டச்சத்தற்ற உணவுக்கும், பசிக்கும் எதிராக மனிதச் சமூகம் எடுத்த முக்கிய நடவடிக்கை இது.

அந்தத் தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் உலக உணவு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன்முதலில் 1981-ம் ஆண்டு அக்டோபர் 16 அன்று இந்த நாள் கொண்டாடப்பட்டது.

உலக அளவில் நிலவிவரும் பசி தொடர்பான விழிப்புணர்வை உலக நாடுகளில் பரவலாக்கவே இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்துக் குறைவான உணவு, பசி போன்ற பிரச்சினைகளுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகளை ஒன்றிணைத்து விவசாய உற்பத்தியில் வளர்ச்சி காணச்செய்வதும் இந்த நாளில் வலியுறுத்தப்படுகிறது.

குடும்ப விவசாயம்

இந்த ஆண்டு, உலக உணவு நாளின் மையக் கருத்து 'குடும்ப விவசாயம்'. உலகுக்கு உணவு வழங்குவதும் பூமி குறித்து அக்கறை கொள்வதுமே குடும்ப விவசாயத்தின் அடிப்படை. குடும்ப விவசாயத்தையும் சிறு விவசாயிகளையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

பசியையும் வறுமையையும் அறவே அழித்தொழிப்பது, உணவுப் பாதுகாப்பை அளிப்பது, ஊட்டச்சத்துள்ள உணவை வழங்குவது, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, இயற்கை வளங்களைச் சிறப்பாகக் கையாள்வது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, வளங்குன்றாத வளர்ச்சியை அடைவது ஆகியவற்றில் குடும்ப விவசாயத்தின் பங்களிப்பின் மீது கவனத்தைக் கூட்டுவதற்காகவே, அந்த மையக் கருத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், இந்த ஆண்டை ஐ.நா. பொதுச்சபை குடும்ப விவசாயத்துக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது. உலக உணவுப் பாதுகாப்புக்குக் குடும்ப விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள் அளித்துவரும் முக்கியப் பங்களிப்பு பற்றி சர்வதேச சமூகம் உணர வேண்டும்.

குடும்பப் பங்களிப்பு

வளர்ந்த, வளரும் நாடுகளின் உணவு உற்பத்தியில் குடும்ப விவசாயமே பிரதானப் பங்கை வகிக்கிறது. இது கிராம வளர்ச்சியின் பல பகுதிகளுடன் தொடர்புகொண்டுள்ளது. உலகத்தில் உள்ள 57 கோடி வயல்களில் 50 கோடிக்கும் மேற்பட்ட வயல்கள், குடும்பங்களுக்குச் சொந்தமானவை.

இந்தக் குடும்பத்தினரே 56 சதவீத விவசாய உற்பத்திக்குக் காரணமாக இருக்கிறார்கள். உலக விவசாய நிலங்களில் குடும்ப விவசாயிகளே குறிப்பிடத்தக்க அளவு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். குடும்ப விவசாயம் சரிவிகித உணவுக்குப் பங்களிக்கிறது; இயற்கை வளத்தைப் பாதுகாக்கிறது; பாரம்பரிய உணவுப் பொருள்களையும் பாதுகாக்கிறது.

உலகத்தில் 84 கோடி பேர் தினசரி பசியால் வாடுகின்றனர். பசியால் வாடுபவரே இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே உலக உணவு அமைப்பு, உலக உணவு நாள் போன்றவற்றின் நோக்கம். இதை நோக்கியே அந்த அமைப்பு போராடிவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x