Published : 15 Oct 2013 03:45 PM
Last Updated : 15 Oct 2013 03:45 PM

பக்ரீத் திருநாள்: கருணாநிதி வாழ்த்து

பக்ரீத் திருநாளையொட்டி, திமுக தலைவர் கருணாநிதி இன்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்தச் செய்தியில், “தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய மக்களால் 16.10.2013 அன்று எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஈத்-உல்-அஸா என்னும் நோன்பைக் குறிக்கும் இந்தப் பக்ரீத் பெருநாள், 'கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது' என்பதை உணர்த்தும் நன்னாளாகும்.

“கெட்டவைகளைப் பார்க்காமல் உங்கள் கண்களைக் கட்டுப்படுத்துங்கள்; கெட்ட செயல்களை விட்டும் உங்கள் கைகளை கட்டுப்படுத்துங்கள்; பொய்களை விட்டு உண்மை பேசுவதில் முனையுங்கள்” என்று ஒவ்வொரு மனிதனுக்கும் - அவன் நல்லவனாக வாழ்வதற்கு உரிய போதனைகளைக் கூறினார் நபிகள் நாயகம்.

நபிகள் நாயகத்திடம் ஒரு மனிதர், “இஸ்லாமில் சிறந்தது எது?” என்று கேட்க; அதற்கு அவர்கள், “ஏழைகளுக்கு உணவளித்தல்; நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் கூறுதல்” என்றார்கள். ஏழைகளுக்கு உணவளித்தல் மூலம் இரக்க உணர்வும், எளியோரை அரவணைக்கும் பெருந்தன்மையும் வளரும்; சலாம் கூறுவதன் மூலம் இதயங்கள் இணையும்; மனித மனங்களில் நேச ஊற்றுகள் பொங்கிப் பெருகும். அது தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் மனத் தூய்மையையும், நெருக்கத்தையும், சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்கிறது இஸ்லாம் நெறி.

இந்த நெறி தழைக்க, எங்கும் மனிதநேயம் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம்; எல்லோரிடமும் இன்முகம் காட்டி, இன்சொல் கூறி இதயங்கள் இணைந்து இன்புற ஏற்ற வழி நடப்போம் என இத்திருநாளில் ஏற்கும் உறுதியுடன்; இஸ்லாமிய சமுதாய மக்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்திவரும் தி.மு.கழகத்தின் சார்பில் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் முஸ்லீம் மக்கள் அனைவருக்கும், எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x