சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பெற முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பெற முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Updated on
1 min read

காவிரியிலிருந்து சம்பா சாகுபடிக்கான தண்ணீரைப் பெற முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை செல்வதற்காக வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், ''காவிரியிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பெற அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும். முதல்வர் அல்லது சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து முறையிட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசையும், கர்நாடக அரசையும் வலியுறுத்தி சட்டப்பேரைவியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என வலியுறுத்தினார்.

ஆனால், முதல்வர் ஜெயலலிதா இது பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பெற முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமருக்கு கடிதம் எழுதுவதோடு தனது வேலை முடிந்து விட்டதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலும், உடனடியாக காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கோரியும் திமுக விவசாய அணித் தலைவர்கள் கர்நாடக முதல்வரை சந்தித்துள்ளனர்.

விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளது. எனவே, கடந்த ஆண்டுபோல வெள்ள சேதம் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால், தமிழக அரசு அதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதுபோல தெரியவில்லை.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in