

புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களைப் பிடித்துள்ளது. தேர்தல் முடிவு வெளியாகி 9 நாட்கள் ஆன பிறகும் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.
மாநிலத் தலைவர் நமச்சிவாயத்துக் கும், அகில இந்திய பொதுச்செயலாளர் நாராயணசாமிக்கும் இடையே முதல்வர் பதவியைப் பிடிப்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் ஷீலா தீட்சித், முகுல்வாஸ்னிக் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் நாராயணசாமி புதுச்சேரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அமைச் சர் பதவிக்கும் அக்கட்சியின் எம்எல்ஏக் களுக்குள் கடும் போட்டி ஏற்பட்டது.
இதனிடையே எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், ஹாஜகான், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் டெல்லிக்கு சென்று அமைச்சர் பதவி கேட்டு வந்தனர்.
சபாநாயகர் பதவியை ஏற்க யாரும் முன்வராத நிலையில் சபாநாயகர் பதவிக்கு அனுபவமுள்ள நபரை நியமிப்பத்திலும் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் புதிய அமைச்சர்களாக நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜ கான், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும், சபாநாயகராக வைத்திய லிங்கமும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த இழுபறியான நிலையில்தான் நாளை பிற்பகல் 12.10 மணிக்கு புதுச்சேரி காந்தி திடலில் நாராயணசாமி தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
இதனிடையே ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமிநாராயணனுக்கு அமைச் சர் பதவி வழங்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதேபோல் வைத்தியலிங்கத்தின் ஆதரவாளர்கள், அவர் சட்டப்பேரவைத் தலைவர் பதவியை ஏற்கக் கூடாது எனக் கூறி அவரது வீட்டின் முன்பு கோஷமிட்டனர். பின்னர் நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற அவர்கள் போலீஸாரால் சமாதானப்படுத்தப்பட்டனர். வைத்தியலிங் கத்தின் சொந்த ஊரான மடுகரையிலும் முதல்வர் பதவி தர வலியுறுத்தி கடை அடைப்பு செய்து மறியல் போராட்டம் நடத்தினர்.