

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பழமையான குடவரைக் கோயிலான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் முடிந்து யாகசாலை மண்டபம் அமைப்பதற்காக மார்ச் 9-ம் தேதி முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
ஏப். 24-ம் தேதி கும்பாபிஷேக விழாவுக்கான கணபதி ஹோமம் நடைபெற்றது. ஏப். 27-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு ராஜகோபுரம், மற்ற விமானங்களுக்கும், காலை 10:30 மணிக்கு மூலஸ்தான விமானத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. பிச்சைக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரி யார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் தமிழகம் முழுவது மிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை தொகுதி எம்.பி. பெரி.செந்தில்நாதன், திமுக எம்எல்ஏ கேஆர்.பெரியகருப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் தலைமையில் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 1,950 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கும்பாபிஷேகத்தையொட்டி காரைக்குடி அரசு போக்குவரத்துக் கழக கோட்டத்தில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. மாவட்ட நிர்வாகம் சார் பில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தன. கோயில் அறங்காவலர்கள் பெரியகருப் பன் செட்டியார், மாணிக்கவாசகம் செட்டி யார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.