Published : 17 Feb 2017 11:09 AM
Last Updated : 17 Feb 2017 11:09 AM

மதுரை அதிமுகவில் கடும் போட்டி: ராஜன்செல்லப்பா அமைச்சர் ஆவாரா?

மதுரை அதிமுகவில் சசிகலாவின் விசுவாசியாக கருதப்படும் முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பாவுக்கு, நேற்று பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மதுரை அதிமுகவில் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். இருவரும் கடந்த 2011-2016 அதிமுக ஆட்சியிலும், அதன்பிறகு இரண்டாவது முறையாக வெற்றிப்பெற்ற அதிமுக ஆட்சிலும் தொடர்ந்து அமைச்சர்களாக இருந்து வருகின்றனர்.

தொடர்ந்து நேற்று பதிவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலும் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மீண்டும் பதவியேற்றனர். செங்கோட்டையனை தவிர மற்ற யாருக்கும் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், மதுரை அதிமுகவில் அமைச்சர் வாய்ப்பை எதிர்பார்த்த சீனியர் ராஜன் செல்லப்பா ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுகவினர் கூறியதாவது:

ஜெயலலிதா இருந்தபோதே சசிகலா குடும்பத்தினருடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவும் நெருக்கமாகவும், அவரது ஆதரவாளர்களாகவும் இருந்தனர். கடந்த ஆட்சியில் ஆர்.பி.உதயகுமார் அமைச்சராகவும், ராஜன் செல்லப்பா மதுரை மாநகராட்சி மேயராகவும் வருவதற்கு சசிகலா குடும்பத்தினரே காரணம் என சொல்லப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜன் செல்லப்பாவுக்கு முதலில் வெளியான வேட்பாளர் பட்டியலில் ‘சீட்’ வழங்கப்படவில்லை.

கடைசி நேரத்தில் மதுரை வடக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எஸ்.பாண்டியன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ராஜன் செல்லப்பா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்தளவுக்கு சசிகலா குடும்பத்தினருடன் ராஜன் செல்லப்பா செல்வாக்கு பெற்றிருந்ததாக கூறப்பட்டது. அதனால், ஜெயலலிதா அமைச்சரவையிலே ராஜன் செல்லப்பாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே அமைச்சரவை பட்டியலில் முதலில் செல்லூர் கே.ராஜூவுக்கு பதிலாக ராஜன் செல்லப்பா பெயர்தான் இடம்பெற்றிருந்ததாகவும், அதன்பிறகு ஜெயலலிதா ராஜன் செல்லப்பாவுக்கு பதில் செல்லூர் கே.ராஜூவை நியமித்ததாகவும் பரவலாக பேசப்பட்டது.

அதன்பிறகும் ராஜன் செல்லப்பா, அமைச்சராக பல வழிகளில் முயற்சி மேற்கொண்டார். ஆனால், மதுரை மாவட்டத்தில் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ இருந்ததால் மூன்றாவதாக இவருக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைக்காமல் தள்ளிப்போனது. ஜெயலலிதா மரணமடைந்த பிறகு சசிகலா பொதுச்செயலாளரானதும் ராஜன் செல்லப்பா அமைச்சராக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.

அதை உறுதி செய்வது போல், ராஜன் செல்லப்பாவுக்கு, சட்டபேரவை பொறுப்பு தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், திடீரென்று அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக போர்க்கொடி உயர்த்தியது, சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனை வழங்கியதால் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டது.

பெரும் போராட்டத்திற்கு பிறகு நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. இதில் செங்கோட்டையனை தவிர பழைய அமைச்சரவை அப்படியே பதவியேற்றதால் ராஜன் செல்லப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், சட்டபேரவையில் பெரும்பான்மை நிரூபித்தபிறகு விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அதில் ராஜன் செல்லப்பாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் உறுதியளிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஏற்கெனவே இரண்டு பேர் மதுரையில் அமைச்சர்களாக இருப்பதோடு அவர்கள் ராஜன் செல்லப்பா சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அமைச்சர் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான். ஏற்கெனவே மதுரை அதிமுகவில் அமைச்சர் பதவியை தக்க வைப்பது, ஒருவரை ஒருவரை வீழ்த்தி மற்றவர்கள் அமைச்சராக முயற்சி செய்யும் காரியங்கள் நடந்து வருகின்றன. அதனால், மூவருக்கும் இடையேயான எதிரும் புதிருமான அரசியல் போட்டி தொடரத்தான் செய்யும். எப்படியும் அமைச்சருக்கு இணையான பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x