Published : 08 Mar 2014 12:00 AM
Last Updated : 08 Mar 2014 12:00 AM

வாக்காளர் பட்டியலில் இரு இடங்களில்பெயர் இருந்தால் வேட்பு மனு நிராகரிப்பு- தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

வாக்காளர் பட்டியலில் இரு வேறு தொகுதிகளில் வேட்பாளர் பெயர் இருந்தால் அவரது மனு நிராகரிக்கப்படும் என்பதற்கும், வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகே, வேட்பாளரின் செலவுகள் கணக்கில் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பதற்கும் தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் சிவஞானம், சசிகுமார் ஆகியோரும் பங்கேற்றனர்.

அரசியல் கட்சிகள் தரப்பில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், சேதுராமன், திமுக சார்பில் ஆலந்தூர் பாரதி, காங்கிரஸ் சார்பில் கோவை தங்கம், சேலம் பாலு, பாஜக சார்பில் சரவண பெருமாள், ராகவன், தேமுதிக சார்பில் எம்எல்ஏ-க்கள் சந்திரகுமார், பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர். ஆறுமுகநயினா, ரமணி (மார்க்சிஸ்ட்), பழனிச்சாமி, சேதுராமன் (இ. கம்யூ), ரஜினி (பகுஜன் சமாஜ் கட்சி) ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற கட்சி பிரதிநிதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறை கையேடுகள் வழங்கப்பட்டன.

கூட்டம் முடிந்த பிறகு அரசியல் கட்சியினர் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தனர். விவரம் வருமாறு: வி.சி.சந்திரகுமார் (தேமுதிக): தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பும், அதற்குப் பிறகும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஆனால், வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட பிறகே வேட்பாளர் செலவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையத்தினர் சொல்கின்றனர். இது எவ்வகையிலும் சரியில்லை.

“இது டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட விதிமுறை. இதில் மாற்றம் செய்யவேண்டுமென்றால் ஆட்சியாளர்களால்தான் முடியும்” என்று ஆணையத்தினர் கூறுகின் றனர். இந்த நடைமுறை சரியில்லை. ஏனென்றால், ஒரு வேட்பாளரை ஆதரித்து கோடிக்கணக்கில் சில கட்சிகள் செலவு செய்து பிரசாரம் நடத்தி வருகின்றன. 5-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்த பிறகுதான் செலவு கணக்கில் எடுக்கப்படும் என்பதை ஏற்க முடியாது.

தேர்தல் கமிஷன் அனுமதி யோடு கட்சித் தலைவர் பின்னால் எத்தனை வாகனங்கள் வேண்டு மானால் செல்லலாம் என்பதை வரவேற்கிறோம். ஆளும்கட்சியினர் மீது தேர்தலின்போது புகார் கொடுத்தால், அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால், தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய காவல்துறை பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்றோம். அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டார்கள். ஆனால், நடுநிலையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

ஆர்.எஸ்.பாரதி (திமுக): தேர்தலை நியாயமான முறை யில் நடத்த வேண்டும், மக்கள் எவ்விதமான அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனக் கேட்டோம். அரசு பஸ்கள், திட்டங்களில் இரட்டை இலை சின்னம் பற்றி புகார் தெரிவித்தோம். ஆணையத்தின் பதில் வந்ததும் முடிவெடுக்கப்படும் என்றனர்.

கோவைத்தங்கம், சேலம் பாலு (காங்கிரஸ்): கடந்த சட்டமன்ற தேர்தலில், வாக்காளர்களை சந்திக்கச் செல்லும்போது போட்டி வேட்பாளர்கள் வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்து தேர்தல் துறையினரை சோதனை செய்யச் செய்து இடையூறு செய்தனர். ஆகவே, வேட்பாளர் தடையின்றி வாக்குச் சேகரிக்க இம்முறை வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினோம்.

வேட்பாளர் பெயர், வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் இருந்தால் வேட்புமனு நிராகரிக்கப்படும் எனச் கூறப்பட்டிருக்கிறது. ஒரு வேட்பாளருக்கு தெரியாமல் அவரது அரசியல் எதிரி பெயரைச் சேர்த்திருந்தால், நிராகரிப்பு என்று கூறினார்கள். ஆனால், “அந்த கையெழுத்து உண்மையானதா என்று சோதனை செய்த பிறகே வேட்புமனுவை நிராகரிப்போம்” என்று உறுதியளித்துள்ளனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x