Published : 10 May 2017 07:55 PM
Last Updated : 10 May 2017 07:55 PM

ஒரே மாதிரியான கேள்வித்தாளை தயாரித்து நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

நாடு முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை தயாரித்து நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு கடந்த 7-ம் தேதி நடந்தது. தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. தேர்வில் 180 கேள்விகள் இடம்பெற்றன. இந்த தேர்வின் அடிப்படையில் அகில இந்திய அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். அப்படி இருக்கும் போது, ஒவ்வொரு முறையிலும் வெவ்வேறு கேள்விகள் இடம் பெற்றுள்ளன. இது கண்டிக்கத்தக்கது.

குஜராத்தி மொழியில் நடைபெற்ற தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், வங்க மொழியில் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆங்கில மொழி கேள்வித்தாளைவிட தமிழ் மொழியில் அமைந்த கேள்வித்தாள் எளிமையாக இருந்தாக கூறப்படுகிறது. எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

மீண்டும் நாடுமுழுவதும் ஒரே மாதிரி கேள்வித்தாளை தயாரித்து அனைத்து மொழிகளிலும் தேர்வை நடத்த வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என்று டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x