Published : 01 Aug 2016 08:27 AM
Last Updated : 01 Aug 2016 08:27 AM

கருணாநிதியுடன் திருச்சி சிவா ஆலோசனை: அமைதியாக இருக்க அறிவுரை

அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தன்னை தாக்கியது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன் திருச்சி சிவா ஆலோசனை நடத்தினார்.

டெல்லியிலிருந்து நேற்று சென்னை வந்த திருச்சி சிவா, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை வருவதற்காக கடந்த சனிக்கிழமை மதியம் டெல்லி விமான நிலையம் சென்றேன். திடீரென எனக்கு வேறு வேலை வந்ததால், பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி இல்லத்துக்கு செல்வதற்காக நின்றிருந்தேன். எனது மனைவியின் நினைவு நாள் விரைவில் வரவுள்ளது. அதற்காக விடுப்பு எடுக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தேன். இதுபற்றி நினைத்துக்கொண்டு நின்றிருந்தபோது, அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா என்னை நோக்கி வந்தார். சுமார் 10 அடி தூரத்தில் நின்றிருந்த அவர், திடீரென அருகில் வந்து என்னைத் தாக்க ஆரம்பித்தார்.

ஊடகங்களில் எல்லாம் எனக்கும் அவருக்கும் கைகலப்பு என்று செய்தி வருகின்றன. இருவரும் தாக்கிக் கொண்டால்தான் கைகலப்பு. நான் சசிகலா புஷ்பாவை அடிக்கவே இல்லை. அவர் மட்டும்தான் என்னை அடித்தார். அவர் பெண் என்பதால் நான் எதுவும் செய்யவில்லை.

‘நானும் எம்.பி., திருச்சி சிவாவும் எம்.பி., அப்படி இருக்கும்போது அவருக்கு மட்டும் ஏன் கூடுதல் மரியாதை கொடுக்கிறீர்கள்’ என்று அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் சசிகலா புஷ்பா வாக்குவாதம் செய்தார். அவரது செயல் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசையும், முதல்வரையும் நான் விமர்சித்ததாக சசிகலா புஷ்பா கூறியுள்ளார். பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு பற்றி குறை கூற வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

அப்படியே விமர்சனம் செய்திருந்தாலும், பொது இடத்தில் அடிப்பதுதான் மரபா? அரசியல் ரீதியாக விமர்சனங்களை செய்தால் பொது இடத்தில் அடிப்பது என்ற புதிய மரபை அவர் தொடங்கி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடருவதா அல்லது வேறு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன்.

இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.

இதைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு திருச்சி சிவா சென்றார். டெல்லி விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கருணாநிதியுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் சிவா கூறும்போது, ‘‘டெல்லி விமான நிலையத்தில் நடந்தது தொடர்பாக கருணாநிதியிடம் விளக்கமாக எடுத்துக் கூறினேன். ‘அவர் (சசிகலா புஷ்பா) அநாகரிகமாக நடந்துகொண்ட போதும் நீங்கள் அமைதியாக இருந்ததுதான் சரி. அமைதியாகவே இருங்கள். வேறெதுவும் செய்ய வேண்டாம்’ என்று கருணாநிதி கூறினார்’’ என்றார்.

சசிகலா புஷ்பா எம்.பி. ஏற் கெனவே உங்களுக்கு அறிமுக மானவரா என்று கேட்டபோது, ‘‘அவர் ஒரு சக நாடாளு மன்ற உறுப்பினர். பத்திரிகை யாளர்களிடம் எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருக்க முடியாது’’ என தெரிவித்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x