

உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர்களை நேரிடையாகத் தேர்வு செய்யும் முறையை மாற்றியுள்ள தமிழக அரசு சட்டத் திருத்தத்தை ரத்து செய்து, பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மானங்கள்
1) புதிய தாராளமயக் கொள்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனையை ரத்து செய்யக் கோரியும், 2016 செப்டம்பர் 2 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.
இந்தப் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டில்அனைத்து மத்திய-மாநில அரசு ஊழியர்களும், தொழிலாளர்களும், பொதுமக்களும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
2) தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர்களை நேரிடையாகத் தேர்வு செய்யும் முறையை மாற்றி, மாநகராட்சி உறுப்பினர்களின் மூலம் தேர்வு செய்கின்ற வகையில் தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மக்களின் வாக்கு அளிக்கும் உரிமையைப் பறிக்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும்.
எனவே இந்தத் திருத்தத்தை ரத்து செய்து, மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பது வரவேற்கத்தக்கது. எனினும் சுழற்சி முறையில் பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர் உள்ளாட்சிப் பதவிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
3) காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் தமிழகம் அண்டை மாநிலங்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றது. வட தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர் சாகுபடிக்கும், லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் பாலாற்றில் வரும் சொற்ப நீரையும் தடுக்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டு வருவது கண்டனத்திற்கு உரியது.
ஆந்திர மாநில அரசின் சட்டவிரோத நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த மத்திய -மாநில அரசுகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.
4) மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் திட்டத்தைத் திட்டமிட்டவாறு செயல்படுத்துவோம் என்று தெரிவித்து இருப்பது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மீத்தேன் திட்டத்தால் சோழ மண்டலமே முற்றிலும் சீரழியும் நிலைமை உருவாகும் என்று எச்சரிக்கை செய்வதுடன், தமிழக அரசு மீத்தேன் எரிவாயு மற்றும் ஷேல் எரிவாயு திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல், காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
5) தேர்தலின்போது முதல்வர் அளித்த வாக்குறுதியின்படி கல்விக் கடன் பெற்ற அனைத்து மாணவர்களின் கடன்களையும் தமிழக அரசே செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
6) விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி குறித்த தமிழக அரசு அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எனினும் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி என்பதை பாரபட்சம் இல்லாமல் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
7) தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகின்றது. கூலிப்படைகள் புற்றீசல் போல் பரவி வருகின்றன. படுகொலைகள் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டன. வீடு புகுந்து கொள்ளையடித்தல், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய சட்டம் ஒழுங்கு சீரழிவுகளைக் கண்டு பொதுமக்கள் அஞ்சி நடுங்குகின்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது.
கூலிப்படைகளை இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கவும், கொலை, கொள்ளைகள், பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
8) திறன் பயிற்சி என்ற பெயரால் எட்டாம் வகுப்பில் இருந்தே தொழிற்கல்வியைக் கற்றுத் தர வேண்டும் என்று, குலக்கல்வித் திட்டத்திற்கு நவீன முறையில் உயிரூட்டவும், அரசியல் சட்டம் வழங்குகின்ற இட ஒதுக்கீடு, சமூக நீதி உரிமையைப் பறிக்கவும் புதியக் கல்விக் கொள்கை இடம் அளிக்கின்றது.
நாட்டின் விடுதலைக்குப் பின்னர் கடந்த 69 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கையை முற்றிலும் மாற்றி அமைத்து, இந்துத்துவா செயல்திட்டத்தைப் புகுத்த முயற்சிக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
தமிழக அரசு இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதை உறுதியாக தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகின்றது.
9) தமிழகத்தில் மூன்று பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவியும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. உயர் கல்வித்துறைச் செயலாளர் பதவியும் காலியாக இருக்கின்றது. அதிமுக அரசின் கல்வித்துறை செயல்பாடுகளுக்கு இவை சான்றாக உள்ளன.
எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
10) மத்திய அரசு சேலம் உருக்காலையைத் தொடர்ந்து இயங்கிட வழிவகை செய்யாமல், தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிப்பது கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு சேலம் உருக்காலை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்தியஅரசின் முடிவை தடுக்க வேண்டும்.
11) பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை தொடர்ந்து மாநாடு நடத்தி மிக சிறப்புடன் கொண்டாடி வரும் மதிமுக இந்த ஆண்டு செப்டம்பர் 15 இல் அறிஞர் அண்ணாவின் 108 ஆவது பிறந்த வாள் விழா மாநாட்டை காவிரி நதிக்கரையில், திருச்சி மாநகரில் சீரும் சிறப்புடனும் வெற்றிகரமாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.