Last Updated : 17 Jun, 2016 01:02 PM

 

Published : 17 Jun 2016 01:02 PM
Last Updated : 17 Jun 2016 01:02 PM

சுற்றுலா செல்வதாக வீட்டில் கூறிவிட்டு ஓசூரில் வழிப்பறியில் ஈடுபட்ட பெங்களூரு கொள்ளையர்கள்: போலீஸாரின் விசாரணையில் தகவல்

ஓசூரில் தலைமைக்காவலரை குத்திக் கொலை செய்த வழிப்பறி கும்பல், கேரளாவுக்கு சுற்றுலா செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, ஓசூரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஓசூரில் நேற்று முன்தினம் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, கொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஏட்டு முனுசாமி உயிரிழந்தார். அப்போது, போலீஸாரிடம் சிக்கிய பெங்களூரு கொள்ளைக் கும்பலைச் சேரந்த மூர்த்தியும் மர்மமான முறையில் இறந்தார்.

வழிப்பறி கொள்ளையர்கள் அனைவரும் 19 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெங்களூரு புறநகர் பகுதியைச் சேர்ந்த இவர்கள் தங்களது வீடுகளில் அவ்வப்போது கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா செல்வதாக கூறி விட்டு ஓசூர் பகுதியில் கைவரிசை காட்டி வந்துள்ளனர்.

ஓசூர் அடுத்த மத்திகிரி டைட்டன் டவுன்ஷிப் பகுதியில் நடந்த மூதாட்டி கொலையில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாகவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடகா போலீஸார் விசாரணை

போலீஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது பிடிபட்ட பெங்களூருவைச் சேர்ந்த மூர்த்தி போலீஸ் விசாரணையின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வீரேந்திர பிரசாத் தலைமையில் 2 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த மூர்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தமிழக போலீஸார் மற்றும் மருத்துவர்களிடம், கர்நாடகா போலீஸார் விவரங்களை கேட்டறிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x