Last Updated : 20 Jan, 2014 12:00 AM

 

Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM

ஓ.எம்.ஆர். சாலையில் விற்பனை மந்தம்: காலியாகக் கிடக்கும் 40 ஆயிரம் ஃபிளாட்கள்

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் (பழைய மகாபலிபுரம் சாலை) பல ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விலை போகாமல், காலியாகக் கிடக்கின்றன. அதிக விலை, சம்பள குறைப்பினால் சாப்ட்வேர் நிறுவன ஊழியர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக வீடுகள் விற்பனை மந்தமாக இருப்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவின் தாக்கம் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்காரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏற்ற, இறக்கம் சகஜமாகிவிட்டது. முன்பெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு ஊழியர்களுக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்த ஐ.டி. நிறுவனங்கள், தற்போது பொருளாதார சரிவை காரணம் காட்டி சம்பள வெட்டு, ஆள் குறைப்பு போன்ற நடவடிக் கைகளில் இறங்கியுள்ளன. இதனால் சாப்ட்வேர் துறையில் பணிபுரிவோரின் வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

கை நிறைய சம்பளம் வாங்கியபோது வீடு, கார் என வாங்கிப் போட்டனர். இதனால், சென்னை மற்றும் புறநகர்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகின. இப்போது நிலைமை மாறிவிட்டதால் வாங்கிய வீட்டுக்கு தவணை கட்ட முடியாமல் பலர் தவிக்கின்றனர். சிலர், ஆசையாய் வாங்கிய வீட்டை விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ முன்வருகின்றனர். நிலைமை சரியாகும் வரை மனைவி, குழந் தைகளை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு, வாடகை வீட்டில் குடியேறுகின்றனர்.

மளமளவென வளர்ந்து வந்த கட்டுமான நிறுவனங்கள் தற்போது, கட்டிய வீடுகளை விற்க முடியாமல் தவிக்கின்றன. குறிப்பாக ஐ.டி. கம்பெனிகள் அதிகம் உள்ள பழைய மகாபலி புரம் சாலையில் (ஓ.எம்.ஆர்.) பல ஆயிரம் வீடுகள் விலை போகாமல் காலியாகக் கிடக் கின்றன என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். மருத்துவ வசதி, குழந்தைகள் படிப்பு, வேறு கம்பெனிக்கு மாறுவது போன்ற காரணங்களுக்காக சோழிங்க நல்லூர், துரைப்பாக்கம், சிறுசேரி பகுதிகளில் வசிப்பவர்கள், சென்னையை நோக்கிப் படை யெடுப்பதால் அவர்களின் வீடுகளும் விலை போகாமல் இருக்கின்றன.

இதுபற்றி சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.தங்கதுரை கூறுகையில், "அடையாறு மத்திய கைலாஷ் முதல் திருப்போரூர் முருகன் கோயில் வரை உள்ள இடங்களில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் விலை அதிகமாக உள்ளது. இதனால் வீடுகளை வாங்க யாரும் முன்வராததால் பல ஆயிரம் வீடுகள் காலியாகக் கிடக்கின்றன. முதலீட்டுக்காக வங்கியில் கடன் வாங்கி ரூ.40 லட்சம், ரூ.60 லட் சம், ரூ.80 லட்சம் கொடுத்து வீடு வாங்கினால், அந்தத் தொகைக்கு வட்டியும் அசலும் செலுத்தும் அளவுக்குக்கூட வீடு வாடகைக்குப் போவதில்லை’’ என்றார்.

சென்னை கட்டுமானப் பொறி யாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் கூறியதாவது:

ஐ.டி. கம்பெனிகளில் லட்சம், லட்சமாக சம்பாதிப்போரை நம்பி ஓ.எம்.ஆர். சாலையில் ஏராளமான அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டப்படுகின்றன. பொருளாதார சரிவும், அதனால் ஐ.டி. கம்பெனிகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற, இறக்கமும் அங்கு வேலை பார்ப்போரை வீடு வாங்க முடி யாமல் செய்துவிடுகின்றன. மேலும் மணல் உள்ளிட்ட கட்டு மானப் பொருட்கள் விலை உயர் வால் வீடுகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இதுவும் விற்பனை மந்தத்துக்கு ஒரு காரணம்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கட்டி முடிக் கப்பட்ட சுமார் 48 ஆயிரம் புதிய வீடுகள், ஃபிளாட்கள் விற்கப் படாமல் இருக்கின்றன. இதில் ஓ.எம்.ஆரில் மட்டும் சுமார் 40 ஆயிரம் ஃபிளாட்கள் காலியாக உள்ளன. பணப்புழக்கம் குறைந்து விட்டதால் புதிய கட்டுமானப் பணிகளும் ஸ்தம்பித்துள்ளன. மொத்தத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் தற்போது சிக்கலைச் சந்தித்து வருகிறது.

ஐ.டி.கம்பெனியில் இன்ஜினீயர் கள் மட்டுமல்லாமல் கட்டுமானப் பணிக்கான இன்ஜினீயர்களும் ஏறக்குறைய 12 ஆயிரம் பேர் ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து வெளியேறிவிட்டனர். இவ்வாறு வெங்கடாசலம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x