அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக பிரேமலதா விஜயகாந்துக்கு விலக்கு

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக பிரேமலதா விஜயகாந்துக்கு விலக்கு

Published on

தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதிலிருந்து விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு விலக்கு அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி தேமுதிக சார்பில் கடந்த மார்ச் 13-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார்.

அரசின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாகக் கூறி தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக இம்மாதம் 21-ம் தேதி பிரேமலதா நேரில் ஆஜராகுமாறு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிப்பதோடு, விசாரணையில் நேரில் ஆஜராக தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் பிரேமலதா ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் டி.மதிவாணன், கே.பி.கே.வாசுகி ஆகியோர் முன்னிலையில் இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையில் நேரில் ஆஜராக பிரேமலதாவுக்கு விலக்கு அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in