இலங்கையில் இருந்து கடத்தி வரப்படும் சிகரெட் ராமநாதபுரத்தில் அமோக விற்பனை

இலங்கையில் இருந்து கடத்தி வரப்படும் சிகரெட் ராமநாதபுரத்தில் அமோக விற்பனை

Published on

இலங்கையில் இருந்து கடத்தி வரப்படும் சிகரெட் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வணிக வரி செலுத்தாமல் விற்பனையாகி வருகிறது. இதை பறிமுதல் செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள், தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பல் வேறு பெட்டிக் கடைகளில் விற் பனை செய்யப்படுகின்றன. இந்தியாவில் தயாராகும் சிகரெட் பாக்கெட்டுகள் மீது, புகைப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு என்ற வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், வெளிநாட்டு சிகரெட்டுகளில் அதுபோன்ற எச்சரிக்கை வாசகம் எதுவும் காணப்படவில்லை.

இதுபோன்ற சிகரெட்டுகளில் அதிக லாபம் கிடைப்பதால் சிறு வியாபாரிகள் ஆர்வத்துடன் விற்பனை செய்கின்றனர். இந்த சிகரெட்டுகள் ரூ.2 முதல் ரூ.5 வரை கிடைப்பதால் பொதுமக்கள் விரும்பி வாங்கி புகைக்கின்றனர். வணிக வரி செலுத்தாமல் விற்பனை செய்யப்படும் இந்த சிகரெட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து மாவட்ட நகர்நல அதிகாரியிடம் கேட்டபோது, அனுமதி பெறாத வெளிநாட்டு சிகரெட், மதுபானங்கள், பான் பராக், ஹான்ஸ், குட்கா ஆகிய வற்றை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களுக்கு அபராதமும், அதிகபட்ச சிறை தண்டனை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in