Published : 01 Mar 2017 09:19 AM
Last Updated : 01 Mar 2017 09:19 AM
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்த கத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம். சென்னை மாநகரப் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் ஆவடி முதல் திருவான்மியூர் வரை செல்லும் மாநகரப் பேருந்து தடம் எண்.47-ல் நடத்துநராக பணியிலிருந்தார். இரவு 10 மணியளவில் திருவான்மியூர் பணிமனைக்கு பேருந்து வந்தது.
அப்போது அவரிடம் இருந்த பயணச் சீட்டுக்கட்டுகள் மற்றும் பணம் வைத்திருந்த கைப்பையை ஒரு மர்ம நபர் பிடுங்கிக் கொண்டு ஓடினார். உடனே சுதாரித்துக் கொண்ட நடத்துநர் ராமஜெயம் சத்தம் போட்டுக்கொண்டு அந்த நபரை துரத்திச் சென்றார். பேருந்து பணிமனை அருகே கண்காணிப்புப் பணியில் இருந்த திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் அந்த நபரை துரத்திச் சென்று பிடித்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் பெயர் அஜய்(19) என்பதும், ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. இவர் தனியார் கல்லூரியில் பி.டெக். படித்துக் கொண்டு, படூரில் உள்ள ஒரு வீட்டில் அறையெடுத்து தங்கி யிருக்கிறார். அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT