Published : 27 Jan 2017 12:47 PM
Last Updated : 27 Jan 2017 12:47 PM

ஜல்லிக்கட்டு வன்முறை: நீதி விசாரணை கோரிக்கை ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸார் தாக்குதல் குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கை ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்பு செய்தது.

சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்தது.

ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்துப் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ''ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பியது சமூக விரோத கும்பல். காவல்துறை குறைந்த பட்ச பலத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுத்தனர்'' விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ''ஜல்லிக்கட்டு நடத்த முதல்வர் டெல்லி சென்று முழு மூச்சாக நின்று நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது, அதை நான் வரவேற்கிறேன். ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, மாணவர்கள் மற்றும் மீனவர்கள் மீது தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன?'' என்று முதல்வரிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸார் தாக்குதல் குறித்து பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை செய்ய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

அந்த கோரிக்கை குறித்து முதல்வர் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தன் கோரிக்கை ஏற்கப்படாததைக் கண்டித்து திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளிநடப்பு செய்தார். திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் உடன் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x