Published : 10 Mar 2014 09:30 AM
Last Updated : 10 Mar 2014 09:30 AM
தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் எதிரொலி
பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயற்பியல், பொருளாதார பாட தேர்வுகள் திங்கட்கிழமை (இன்று) நடக்கின்றன. மார்ச் 25-ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து மறுநாள் (மார்ச் 26) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது.
இந்த தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி நிறைவடையும். தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பள்ளிகளில் மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுமா, அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்வி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வும் (3-வது பருவத் தேர்வு), 11-ம் வகுப்பு ஆண்டுத் தேர்வும் ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி 16-ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக இந்த வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் இறுதிவாக்கில்தான் முடிவடையும். மக்களவைத் தேர்தலை கருத்தில்கொண்டு ஆண்டுத் தேர்வு இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படுகிறது.
தொடக்கப் பள்ளிகளுக்கு எப்போது?
செய்முறைத் தேர்வு மார்ச் 25-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். 11-ம் வகுப்புக்கான ஆண்டுத் தேர்வும் இதேபோல் ஏப்ரல் 3-ல் தொடங்கி 16-ம்தேதி நிறைவடையும்.
தொடக்க கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு ஆண்டுத் தேர்வுகள் எப்போது தொடங்கி எப்போது முடிவடையும் என்பது திங்கள்கிழமை (மார்ச் 10) அறிவிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT