Last Updated : 12 Sep, 2016 09:49 AM

 

Published : 12 Sep 2016 09:49 AM
Last Updated : 12 Sep 2016 09:49 AM

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வை தொடங்கியது தேமுதிக: கூட்டணி நிலை தெரியாததால் தொண்டர்கள் அதிருப்தி

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வை தேமுதிக தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் கூட்டணி குறித்து விஜயகாந்த் எதுவும் அறிவிக்காததால் தொண்டர்கள் பணியை தொடங்க முடியாமல் அதிருப்தி யில் உள்ளனர்.

தேர்தலுக்கு பிறகு மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக இடையே யான உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்டது. கடந்த மாதம் 25-ம் தேதி விஜயகாந்தின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் வைகோ, திருமாவள வன் உள்ளிட்ட ம.ந. கூட்டணி தலைவர்கள் ஒன்றாக சென்று அவரை வாழ்த்தினர். இதனால் உள்ளாட்சித் தேர்தலையும் அந்தக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக சந்திக்கும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், கூட்டணி குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களை தேர்வு செய்வதற்கான பொறுப்பை மாவட்டச் செயலாளர்களிடம் தேமுதிக தலைமை அளித்துள்ளது. அதன்படி, கடந்த ஒரு வாரமாக வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் தேமுதிகவினர் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தா லும், கூட்டணி பற்றி விஜயகாந்த் மவுனம் சாதிப்பதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் தேமுதிக தோல்வியை தழுவியது. இதற்கு முக்கிய காரணம், கூட்டணி சரியாக அமையாததுதான். உள்ளாட்சித் அமைப்பிலாவது பதவிகளை பிடித்துவிடலாம் என்ற கனவில் தேமுதிக தொண்டர்கள் இருந்தனர்.

வேட்பாளர் தேர்வில் நாங்கள் ஆர்வத்துடன் பங்கேற்றாலும், கூட்டணி பற்றி கட்சித் தலைமை எதுவும் அறிவிக்காதது வருத் தத்தை ஏற்படுத்தியுள்ளது. வேட் பாளராக தேர்வு செய்யப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கையில் பணிகளை தொடங்கிய பிறகு கூட்டணி என்று அறிவித்தால் சிக்கலாகிவிடும். எனவே, கட்சித் தலைமை வழக்கம்போல மவுனம் காக்காமல், கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பதை விரைவில் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் பணிகளை ஆக்கப்பூர்வமான முறையில் தொடங்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோ வனிடம் கேட்டபோது, ‘உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை. கூட்டணி பற்றி விஜயகாந்த் உரிய நேரத்தில் அறிவிப்பார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x