

சென்னையில் மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு, சென்னையில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்யத் தொடங்கியது. இன்று பிற்பகல் தொடங்கி விட்டுவிட்டு மழை கொட்டியவண்ணம் உள்ளது.
இதனால் முக்கிய சாலைகளில் ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களால் மழை நீர் தேங்கி, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதியுற்று வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்குபருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. ஏற்கெனவே பெய்த மழையினால் மழைநீர் வெள்ளம் போல் ஓடின. இதனால் அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி, திருவொற்றியூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளின் பல்வேறு இடங்களில் மேடு, பள்ளங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையே, சென்னையில் கடந்த ஒரு வாரம் பிறகு மீண்டும் நேற்று தொடங்கி மீண்டும் மழை பெய்ததால் முக்கியமான சாலைகளில் ஏற்பட்டு இருந்த மேடு, பள்ளங்களில் மழை நீர் தேங்கின. வாகனங்கள் மெதுவாக சென்றன.
டிஎம்எஸ் மற்றும் எல்ஐசி அருகே சாலைகளில் 4 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டன. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சுமார் ஒரு மணிநேரம் ஊர்ந்து சென்றன. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் வந்து தற்காலிக பணிகளை மேற்கொண்டு பள்ளங்களை சரிசெய்தனர்.
ஜிஎஸ்டி சாலை, அண்ணாசாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தன. இதனால், பணி முடித்து திரும்பும் மக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர்.
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில முறை மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ, சில இடங்களில் கனமழையோ பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.