Published : 29 Dec 2013 03:12 PM
Last Updated : 29 Dec 2013 03:12 PM

இலங்கை கடற்படையால் 22 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு

இலங்கை கடற்படையினரால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தமிழக மீனவர்கள் 22 பேர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

இலங்கை சிறையில் வாடும் தமிழகம் மீனவர்கள் 227 பேரையும், அவர்களுக்கு சொந்தமான 77 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம், உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டங்கள் என்று தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும், தமிழக முதல்வர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்தும் வருகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிகள் செய்து வந்தாலும், இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி, 22 மீனவர்களை கைது செய்தனர். மீனவர்களின் 6 விசைப்படகுகளையும், வலைகளையும் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படை காங்கேசன் துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், சிறைப்பிடிக்கப்பட்ட 22 மீனவர்களையும் ஜனவரி 10-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க, ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, இலங்கை சிறைகளில் 30–க்கும் மேற்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் வாடிவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் 22 பேர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் கடலோர கிராமங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீனவ சங்கத் தலைவர் பேட்டி

தமிழக மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலையில் மீன் பிடிப்பதால், இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என விசைப்படகு மீனவர் சங்க தலைவர் போஸ் செய்தியாளர்களிடம் ராமேஸ்வரத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ராமேசுவரத்தில் நடைபெற்ற மீனவர் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு விசைப்படகு மீனவர் சங்க தலைவர் போஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2010-ம் ஆண்டில் இரு நாட்டு மீனவர்களும் சென்னையில் நடத்திய பேச்சுவார்த்தை சரத்துகளை, சில காரணங்களால் அமல்படுத்தப்படாமலே உள்ளது. பேச்சுவார்த்தையின் முக்கியமான ஷரத்தே இரு நாட்டு மீனவர்களும் தடை செய்யப்பட்ட வலையில் மீன்பிடிக்கக்கூடாது என்பதுதான்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட வலையில் மீன்பிடிப்பதால்தான் பாக்சலசந்தி கடற்பரப்பு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்வளம் அழிந்துத வருகிறது.

இந்த வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தாமல் நிறுத்தினால்தான், இருநாட்டு மீனவர்களிடமும் சுமூக உறவு ஏற்படும். இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுவதற்கும் வழிவகுக்கும்.

தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பதை தமிழக அரசும், மீன்வளத்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x