

தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் தலைவர் இரா.கிருஷ் ணமூர்த்தி கூறியிருப்பதாவது:
சிறிய வடிவிலான செம்பு நாணயம் ஒன்று சமீபத்தில் கிடைத்தது. அது நீண்ட காலம் நீரில் கிடந்ததால், ரசாயன மாற் றங்கள் ஏற்பட்டு, எளிதில் ஆய்வு செய்ய முடியாத நிலையில் இருந்தது. ரசாயனக் கலவை களைப் பயன்படுத்தி அதை சுத்தம் செய்து பார்த்தபோது, அதன் முன் புறத்தில், இடதுபுறம் நோக்கி, மன்னரின் தலை அச்சாகி இருந்தது. மன்னரின் மூக்கு மிகக் கூர்மையான அமைப்பில் இருந்தது. அழகிய மீசை, தாடியும் இருப்பதுபோல் தோற்றம் அளித்தது. தலையில் அழகிய கிரீடம் உள்ளது.
மன்னரின் முகத்துக்கு எதிரே, நாணயத்தின் இடதுபக்க விளிம்பின் அருகே, கீழிருந்து மேல்நோக்கி, ‘தமிழ்-பிராமி’ எழுத்து முறையில், செ-ழி-ய-ன் என 4 எழுத்துக்கள் உள்ளன. இதை, ‘செழியன்’ என, படிக்க முடிந்தது. முதல் எழுத்தின் தலைப்பகுதி, சரியாக அச்சாகவில்லை. அதேபோல், ‘ழி’ எழுத்தும் சற்று தெளிவில்லாமல் உள்ளது. ‘ய’ மற்றும் ‘ன்’ எழுத்துக்கள் தெளிவாக உள்ளன.
நாணயத்தின் பின்புற மத்தியில், தேய்ந்த நிலையில் 2 மீன் சின் னங்கள் உள்ளன. மீன்களைச் சுற்றி இடப்பக்கத்திலிருந்து, ‘செழியன்’ என்ற பெயர், ‘தமிழ்-பிராமி’ எழுத்து முறையில் அச்சாகியிருந்தன. நுட்பமாக ஆய்வு செய்தால்தான், இந்த எழுத்துக்களை எளிதில் அறிய முடியும்.
மன்னர் தலையுடன், 'செழியன்' பெயர் பொறித்த 2 நாணயங்கள் குறித்து ஏற்கெனவே கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறேன்.
சங்ககால மதுரையை தலை நகராகக் கொண்ட பாண்டியர்கள் வெளியிட்ட நாணயங்களின் பின்புறத்தில், கோட்டு வடிவுடைய மீன் சின்னம் இருப்பதைப் பற்றியும், 'செழியன்' பெயர் பொறித்த சில நாணயங்களின் பின்புறம் இரட்டை மீன்கள் இருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறேன். பின்புறம் காணப்படும் இரண்டு மீன் சின்னம், கொற்கைப் பாண்டியரின் தனி ஆட்சியை உறுதிப்படுத்துகிறது.
அசோக பேரரசர், தன் கிர்னார் கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, சேர, தாம்பரபருணி என்ற நாடுகள், தன் நாட்டின் தென் எல்லைக்கு அப்பால் இருந்ததாகக் கூறியுள்ளார். நான், சங்ககாலக் கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட, 'செழியன்' நாணயங்களை வைத்து ஆய்வு செய்தபோது, தாமிரபருணி நாடு, தென் தமிழகத்தில்தான் இருந்தது. அதன் தலைநகர், 'கொற்கை' என்று கூறியுள்ளேன்.
இப்போது மேலும், மேலும் சான்றுகள் கிடைப்பது, தமிழக தொன்மை வரலாற்றைப் பற்றிய ஆய்வுக்கு அதிக அளவு உதவும் என்று நம்புகிறேன் என்றார்.