Published : 04 Jul 2016 08:51 AM
Last Updated : 04 Jul 2016 08:51 AM

இலங்கை கடற்படையினரால் 5 ராமேசுவரம் மீனவர்கள் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை அந்நாட்டு கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து 600 விசைப்படகுகளில் 3,000 மீனவர்கள் மீன் பிடிக்க சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இவர்களில் நம்புரெத்தினம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கணேஷ், சாரதி, தனம், மாரிமுத்து, வேலாயுதம் ஆகிய 5 மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி அந்நாட்டுக் கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் முடிவடைந்து கடந்த ஜுன் மாதத்தில் ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்கவும், இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்தவும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் வலியுறுத்தி திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் தமிழக மீனவப் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை கடந்த 29-ம் தேதி டெல்லியில் சந்தித்துப் பேசினர்.

அப்போது “இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படும். இலங்கை மீன்வளத் துறை அமைச்சரை டெல்லிக்கு அழைத்துப் பேசுவோம். இந்திய, இலங்கை மீனவர்கள் பங்கேற்கும் நான்காம்கட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும்” என்று சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்தார்.

மீனவர்கள் அதிர்ச்சி

அவர் உறுதி கொடுத்த 3-வது நாளிலேயே ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x