Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 23 Dec 2013 12:00 AM

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 101 சதவீதம் குடிநீர் உற்பத்தி செய்து புதிய சாதனை

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் 101 சதவீதம் குடிநீர் உற்பத்தி செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை நகரின் தண்ணீர் தேவை குறித்து முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் ஆய்வு செய்தார். அதையடுத்து குடிநீர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டது.

சென்னை குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அப்போதிருந்தே இந்த நிலையத்தில் சென்னை குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையம், இப்போது 101 சதவீதம் குடிநீர் உற்பத்தி செய்து, அதன் உற்பத்தித் திறனில் புதிய சாதனை படைத்துள்ளது. இதையடுத்து சென்னை குடிநீர் விநியோகத்துக்கு இந்த நிலையத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. அதனால் குடிநீர் விநியோகத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. அப்போது, கடல்நீரைக் குடிநீராக்கும்

2 நிலையங்கள் மற்றும் வீராணம் ஏரியில் இருந்து கிடைத்த நீரைக் கொண்டு சென்னையின் குடிநீர்த் தேவை சமாளிக்கப்பட்டது. இந்த நீராதாரங்கள், சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 60 சதவீதத்துக்கும் மேல் பூர்த்தி செய்து வருகின்றன.

தற்போது பருவமழையால் சென்னைக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் பல்வேறு நீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் 101 சதவீதம் குடிநீர் உற்பத்தியை எட்டியிருப்பதால், சென்னை குடிநீர் விநியோகத்துக்கு கணிசமான அளவு கூடுதல் குடிநீர் கிடைக்கும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x