Published : 29 Jan 2014 09:40 AM
Last Updated : 29 Jan 2014 09:40 AM

ஊழல்வாத கட்சிகளுடன் தே.மு.தி.க கூட்டு சேராது: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தும் தே.மு.தி.க, ஊழல்வாத கட்சிகளுடன் கூட்டணி வைக்காது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அந்தமான் படகு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பா.ஜ.க ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

பலியானவர்கள் குடும்பங் களுக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். இதுபோன்ற சோக சம்பவங்களைத் தடுக்க, படகுகள் உட்பட அரசு வாகனங்கள் அனைத்தையும் அடிக்கடி சோதிக்க வேண்டும்.

சென்னையில் நடந்த இலங்கை மற்றும் தமிழக மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டியதாக சொல்லப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது இலைமறை காயாகவே உள்ளது. இதை வைத்து பார்க்கையில் அந்தப் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டதாக தெரியவில்லை.

ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தவிருக்கும் தே.மு.தி.க, ஊழல்வாத காங்கிரஸ் மற்றும் தி.மு.கவுடன் கூட்டணி வைப்பது சாத்தியமில்லை. தே.மு.தி.க மற்றும் பா.ம.கவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிப்ரவரி 8-ம் தேதி நரேந்திர மோடி பங்கேற்கும் மாநாட்டத்தில் வைகோ, பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தவிர கூட்டணி பேச்சு வார்த்தைகள் முடிந்ததும் மற்ற கட்சித்தலைவர்களும் அந்த மாநாட்டில் பங்கேற்பார்கள். பா.ஜ.கவின் தாழ்த்தப்பட்டவர் அணி சார்பில் மதுரையில் வருகிற 21-ம் தேதி சமூகநீதி மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x