Published : 22 Jan 2014 12:08 PM
Last Updated : 22 Jan 2014 12:08 PM

தமிழக மீனவர்கள் 25 பேர் இலங்கை சிறையிலடைப்பு

இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தி 25 மீனவர்களை சிறையில் அடைத்தது, தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய - இலங்கை இருநாட்டு மீனவர்கள் பிரட்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது தொடர்பாக கடந்த ஜனவரி 15 அன்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் மற்றும் இலங்கை அமைச்சர் ரஜீதா சேனரத்னே ஆகியோர் தலைமையில் இருநாட்டு மீன்வளத்துறை அதிகாரிகளும் இணைந்து டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா மற்றும் இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களும், படகுகள்ம் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிப்பப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இலங்கை அரசு ஜனவரி 14 அன்று 52 மீனவர்களும், ஜனவரி 17 அன்று 121 மீனவர்களும், சனிக்கிழமை 60 மீனவர்களும் என இதுவரை இலங்கை நீதிமன்றங்களினால் கடந்த வாரம் வாரத்தில் 233 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அதுபோல தமிழக அரசு ஜன 13 அன்று 52 மீனவர்கள், ஜன 17 அன்று 61 மீனவர்கள், ஜனவரி 18 அன்று 17 மீனவர்கள் என 130 இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்தது.

மேலும், இருநாட்டு மீனவர்களின் சந்திப்பு வருகிற 27–ந்தேதி சென்னையில் நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்தார்.

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தி செவ்வாய்கிழமை மீனவர்களை சிறைப்பிடித்தது.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்திலிருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கட்கிழமை கடலுக்குச் சென்றனர். நள்ளிரவில் மீனவர்கள் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறிய ரக ரோந்து கப்பல்களில் ரோந்து வந்தனர்.

அப்போது, ராமேஸ்வரத்தை சார்ந்த ஆரோக்கியராஜ் என்பவரது விசைப்படகு மீது மோதி படகை சேதப்படுத்தினர். மேலும் 10க்கும் மேற்பட்ட விசைப்படகின் வலைகளை அறுத்து கடலில் எறிந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி 25 மீனவர்களையும் சிறைப்பிடித்து அவர்களின் 6 விசைப்படகை கைப்பற்றி சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை காவல்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

இலங்கை காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னர் மீனவர விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதன்கிழமை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள்.

மீனவர்களை விசாரித்த நீதிபதி பிப்ரவரி 3 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீனவர்கள் 25 பேரும் யாழ்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x