Published : 21 Mar 2014 09:40 AM
Last Updated : 21 Mar 2014 09:40 AM

புதுச்சேரியில் போட்டியிடுவது யார்?: பா.ஜ.க கூட்டணியில் தொடரும் பேச்சுவார்த்தை

பா.ஜ.க. கூட்டணியில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாமக போட்டியிடுமா? ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்கிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் பா.ஜ.க. கூட்டணியில் முடிவு அறிவிக்கப்பட்டது. இதற்கான முடிவை பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் வியாழக்கிழமை மாலை அறிவித்தார்.

புதுச்சேரி தொகுதி யாருக்கு? என்பதை அவர் அறிவிக்கவில்லை. இதனால் புதுச்சேரி தொகுதி யாருக்கு என்ற குழப்பம் தொடர்ந்து வருகிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த புதுச்சேரி மாநில பாஜ தலைவர்களும், முதல் அமைச்சர் ரங்கசாமியும் சென்னையில் தங்கியுள்ளனர்.

இதேபோல பாமக வேட்பாளரும், மாநில அமைப்பாளருமான அனந்தராமனும் சென்னையில் தங்கியுள்ளார்.

இதுகுறித்து பாமக மாநில அமைப்பாளர் அனந்தராமனிடம் கேட்டபோது, தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு பங்கீட்டை மட்டுமே பாஜ தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 8 தொகுதிகள் போதாது, கூடுதலாக ஒரு தொகுதியாக புதுச்சேரியை தர வேண்டும் என ஆரம்பம் முதல் வலியுறுத்துகிறோம்.

புதுச்சேரி தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படும் என தெரிகிறது என்றார் அனந்தராமன்.

இதுதொடர்பாக பாஜக புதுச்சேரி மாநில தலைவர் விஸ்வேஸ்வரனிடம் கேட்டதற்கு, “புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலிடத்தில் இதை தெரிவித்தனர்” என்றார்.

என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலர் பாலனிடம் கேட்டதற்கு, “பாஜக கூட்டணியில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுகிறது. முதல்வர் ரங்கசாமியும் ஏற்கெனவே அதை அறிவித்துள்ளார்” என்றார்.

எனினும் பாஜ கூட்டணியில் எக்கட்சி போட்டியிடும் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாக அனைவரும் காத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x