Last Updated : 26 Oct, 2013 11:10 PM

 

Published : 26 Oct 2013 11:10 PM
Last Updated : 26 Oct 2013 11:10 PM

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்ததால், மீனவர்கள் உயிருக்கு பயந்து மீன்பிடிக்காமல் கரை திரும்பினர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தங்கச்சிமடத்தைச் சார்ந்த நிக்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் விசைப்படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை விரட்டியடித்தனர்.

இதுபற்றி மீனவர் அந்தோனி கூறும்போது, "நாங்கள் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து கொண்டு போய் கொண்டிருந்தோம். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் முதலில் வானத்தைப் பார்த்து சுட்டு பின்னர் எங்கள் படகை பார்த்து சுட்டனர். இதில் 4 தோட்டாக்கள் படகில் பாய்ந்து படகின் கண்ணாடிகள் உடைந்தன. எங்கள் படகில் இருந்த 5 மீனவர்கள் குண்டடி படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தோம். இலங்கை கடற்படையால் அறுத்து எரியப்பட்ட வலைகளை சேகரித்ததும் கரை திரும்புகிறோம்'' என்றார்.

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூட்டால் அச்சமடைந்த பெருன்பான்மையான மீனவர்கள் மீன்பாடு இல்லாத பகுதிகளில் மீன்பிடித்துச் சென்றனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தலைவர் தேவதாஸ், ''இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை இரு நாட்டு மீனவர்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷே இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை விரைவில் நடத்த வேண்டும் என்றார். ஆனால் மத்திய, மாநில அரசுகளோ ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தி வருகின்றனர்.

மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தப்பட வேண்டும்" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x