Published : 24 Dec 2013 09:35 AM
Last Updated : 24 Dec 2013 09:35 AM

அமெரிக்க பாடகரை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறி டி.ராஜேந்தரிடம் ரூ.1 கோடி மோசடி

அமெரிக்க பாடகரை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறி, ரூ.1 கோடி மோசடி செய்து விட்டனர் என்று சென்னை காவல் ஆணையரிடம் லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர் புகார் கொடுத்துள்ளார்.

லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் திங்கள் கிழமை காலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஜார்ஜை சந்தித்து ஒரு புகார் மனுவை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

"எனது மகன் சிலம்பரசன் பாடி தயாரித்துள்ள ‘லவ் ஆன்தம்’ (காதல் கீதம்) என்ற சர்வதேச இசை ஆல்பத்தில் பாடுவதற்காக, அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் ஏகானை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தோம். இதற்காக தமிழகத்தில் வசித்து வரும் ராம்ஜி சோமா மற்றும் கனடாவைச் சேர்ந்த டெரிபாத் ஆகியோரை சந்தித்து பேசி

னோம். அவர்கள் பாடகர் ஏகானை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறினர். இதற்காக அவர்களுக்கு நான் ஒரு லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.1 கோடி) கொடுத்தேன். பணம் கொடுத்ததற்கு ஆதாரமாக அவர்களுக்கு இடையே எழுத்துப்பூர்வமாக ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டேன். அந்த ஒப்பந்தத்தின்படி பாடகர் ஏகானை அவர்கள் ‘புக்’ செய்து தரவேண்டும். முடியாத பட்சத்தில் நான் கொடுக்கும் பணத்தை திருப்பி தர வேண்டும். ஆனால் இருவரும் அவர்கள் கூறியபடி நடந்து கொள்ளவில்லை. இதனால் அவர்களிடம் கொடுத்த 1 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலரை திருப்பிக் கேட்டேன்.

அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தனர். இதன் பிறகு விசாரித்தபோதுதான் ராம்ஜி சோமாவும், டெரிபாத்தும் மோசடி பேர்வழிகள் என எனக்கு தெரியவந்தது. இதற்கிடையே வேறு ஒரு நிறுவனத்தின் மூலம் பாடகர் ஏகானை நான் ஒப்பந்தம் செய்து அவரை சென்னைக்கு வரவழைத்து பாடல் பதிவுகளையும் முடித்து விட்டேன்.

ராம்ஜி சோமாவும், டெரிபாத்தும் நான் அனுப்பிய வக்கீல் நோட்டீஸையும் வாங்கிக் கொள்ளாமல் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கிடையே வேறு சிலரையும் இதேபோல் அவர்கள் ஏமாற்ற நினைப்பது எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து எனது பணம் திரும்ப கிடைக்க ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன். என்று டி.ராஜேந்தர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x