

பவானி நீருக்காக 20-ம் தேதி நடைபெறுவதாக இருந்த மதிமுகவின் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் எதிர்கால வாழ்வையே நாசமாக்கும் விதத்தில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பு அணைகளைக் கட்டத் தொடங்கிவிட்டது. இதைத் தடுத்து நிறுத்தாவிடில் கொங்கு மண்டலத்தின் பிரதான பகுதி மக்கள் குடிக்கக்கூட தண்ணீர் இன்றி துன்பத்துக்கு ஆளாவார்கள்.
இதைத் தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்பதை வலியுறுத்தி 20-ம் தேதி மதிமுக சார்பில் அறப்போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது தமிழகமெங்கும் மாணவர்களும், பொதுமக்களும் முன்னின்று நடத்துகிற ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்குவதற்கான போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் பவானி நீருக்கான போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது'' என்று வைகோ கூறியுள்ளார்.