

காணாமல் போன 5 மீனவர்களையும் தேடும் பணியை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: "நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி மற்றும் வாணவன்மாதேவி மீன்பிடி கிராமங்களைச் சேர்ந்த திருவாளர்கள் தங்கராஜ், இராமலிங்கம், தர்மபாலன், ஜெகன் மற்றும் விஷ்ணு ஆகிய 5 மீனவர்கள் தரங்கம்பாடியிலிருந்து IND-TN--06-MO-1202 பதிவு எண் கொண்ட மீன்பிடி படகில் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு 3.10.2014 அன்று அதிகாலை சென்றனர். 7.10.2014 அன்று திரும்ப வேண்டிய இம்மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை.
மேற்படி காணாமல் போன மீனவர்களை விரைவில் மீட்பதற்காக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
மேற்படி மீனவர்களை வான் மற்றும் கடல் வழியாக தேடும் பணிகள் மீன்வளத் துறையினர், தமிழக கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கடலோரக் காவல் படையினரால் துவங்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.