Published : 18 Aug 2015 12:38 PM
Last Updated : 18 Aug 2015 12:38 PM

இளங்கோவனுக்கு எதிராக வலுக்கும் அதிமுகவினர் போராட்டம்

அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசியதாக, அவரைக் கண்டித்து அதிமுகவினர் இன்று 2-வது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 15-ம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய இளங்கோவன், அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தொடர்பாக சில கருத்துகளை பதிவு செய்தார்.

சத்தியமூர்த்தி பவன் முற்றுகை:

முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை அதிமுகவினர் நேற்று (திங்கள்கிழமை) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

இதேபோல், அடையாறு சத்யா ஸ்டுடியோ, திருவொற்றியூர், பல்லவன் அருகே 2 இடங்களில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அதிமுக எம்.பி., நவநீதகிருஷ்ணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேற்று இரவில் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அதிமுகவினர் சத்தியமூர்த்தி பவன் கட்டட முகப்பில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பெயர்ப் பலகையை உடைத்ததாகக் கூறப்படுகிறது மேலும் கட்டடத்துக்கு உள்ளே கற்களையும், சோடா பாட்டில்களையும் வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

2-வது நாளாக போராட்டம்:

இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஈவிகேஎஸ்.இளங்கோவனைக் கண்டித்து அவரது உருவ பொம்மைகளை எரிந்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அண்ணாசாலையில் இன்று காலை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து தடை பட்டது.

தமிழிசை சவுந்தராஜன் கண்டனம்:

இதற்கிடையில், ”மோடி - ஜெயலலிதா சந்திப்பு குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய வார்த்தைகள் கடும் கண்டனத்துக்குரியது.அதை ஆதரிக்கும் தலைவர் வைகோ உட்பட யாராக இருந்தாலும் அவர்களுக்கும் பாஜக தனது கண்டனத்தை தெரிவிக்கிறது" என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x