Published : 09 Jul 2016 09:37 AM
Last Updated : 09 Jul 2016 09:37 AM

பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம்: கல்வித் தரத்தை மேம்படுத்த கல்வியாளர்கள் யோசனை

தகுதியான ஆசிரியர்களை, அரசுப் பள்ளிகளுக்கு தேர்வு செய்ய தமிழக அரசு பி.எட் (B.Ed), டி.டி.எட் (D.T.Ed) படித்தவர்கள் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாய மாக்கி உள்ளது.

அதனால், தற்போது அரசு ஆசிரியர் ஆவதற்கு பி.எட், டி.டி.எட் மட்டுமே அடிப்படைத் தகுதியாக கருத முடியாது. அதேநேரத்தில், பிளஸ் 2, இள நிலை, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் யார் வேண்டுமானா லும் பி.எட், டி.டி.எட் படிப்பில் சேரலாம், ஆசிரியராகலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் ஆகலாம். அதற்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை.

அரசின் இந்த நடவடிக் கையை தனியார் பள்ளி நிர்வாகங் கள் சரியாக பயன்படுத்திக் கொண்டதால், ஆசிரியர் பயிற்சி முடித்தும் அரசுப் பள்ளிகளில் பணி வாய்ப்பு கிடைக்காதவர்கள், மாற்றுத் துறைகளுக்குச் செல்ல முடியாமல் தனியார் பள்ளிகளில் 2 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் கொத்தடிமைகளைப் போல பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை பார்க்கும்போது, அரசுப் பள்ளி ஆசிரியர்களைவிட, டெட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை அதிக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் எடுக்க வைத்து சாதிக்கின்றனர். அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்களை நம்பி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், வசதியானவர்கள் மற்றும் நடுத்தர மக்கள், தங்கள் குழந்தைகளை கூடுதல் மதிப்பெண், ஆங்கிலக் கல்வி பெற தனியார் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்து உள்ளது. அதனால், தனியார் பள்ளிகள் ஆதிக்கம் கிராமங்கள் வரை பெருக ஆரம்பித்துள்ளதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் ஊதியத்துக்காக கல்வித்துறை ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும், அரசுப் பள்ளி ஆசிரியர் களால் தனியார் பள்ளி ஆசிரியர் களைப்போல் ஏன் சாதிக்க முடிய வில்லை என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து காந்திகிராம பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் ஜாகீதா பேகம் கூறும்போது, “பி.எட், டி.டி.எட் சேருவதற்கே தகுதித்தேர்வை அவசியம் நடத்த வேண்டும். ஒருவரை ஆசிரியர் பயிற்சி படிக்க வைத்துவிட்டு, அதற்குப் பின் தகுதித் தேர்வு மூலம் அவர் தகுதி பெறவில்லை எனக் கூறுவது அவசியமில்லாதது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பின்லாந்து போன்ற கல்வியில் சிறந்து விளங்கும் மேலை நாடுகளில் ஆசிரியராவது கடினமான காரியம். ஆசிரியர் கல்வியில் சேரவே பல படிநிலைகளைத் தாண்ட வேண்டும். நமது நாட்டில் தரமான கல்விச் சூழலை மீட்டெடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை” என்றார்.

கல்வியில் பின்தங்கிய அரசுப் பள்ளிகள்

ஜாகீதாபேகம் மேலும் கூறும்போது, “சர்வதேச அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை சோதிப்பதற்கு, சர்வதேசக் கூட்டமைப்பு ஒன்று, 74 நாடுகளில் PISA என்ற ஆய்வை நடத்தியது. இதில், இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x